/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
/
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ADDED : ஆக 05, 2025 01:36 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்திலுள்ள குருமன்ஸ் இன மக்கள், வீரபத்திர சுவாமியை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில், அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு வீரபத்திர சுவாமியை எடுத்து சென்று பூஜை செய்தும், கத்தி கழுவுதல் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. மறு நாள் காலை தங்களது முன்னோர்களை வணங்கி, வீரபத்திர சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பக்தர்கள் தங்களது தலையில், தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றுவர். அதன்படி நேற்று, வீரபத்திர சுவாமிக்கு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
காலை, 9:30 மணிக்கு கோவிலில் இருந்து வீரபத்திர சுவாமி உள்ளிட்ட சுவாமி சிலைகளை அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்திற்கு ஊர்வலமாக மக்கள் எடுத்து வந்தனர். அங்கு, சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, படையல் போட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
பின், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடன் செலுத்தினர். பையர்நத்தம் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து மேளதாளத்துடன் சுவாமி ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தது. விழாவில் சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.