ADDED : நவ 17, 2024 01:32 AM
தர்மபுரி, நவ. 17-
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, 2025 ஜன., 1 தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கான முகாம், தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்தது. இதில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய, 5 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 1,501 ஓட்டுச்சாவடிகளை உள்ளடக்கிய, 907 மையங்களில் வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, இன்று மற்றும் நவ., 23, 24 ஆகிய நாட்களில் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. இதில், ஓட்டுச்சாவடி மையத்திற்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவர்கள், https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மற்றும் Voter Helpline என்ற மொபைல் செயலி மூலம், விண்ணப்பங்களை அளிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம்
அறிவித்துள்ளது. அதியமான்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை, மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டார். இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை, தர்மபுரி தாசில்தார் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.
* அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடந்த முகாமை அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி ஆய்வு செய்தார். அதேபோல், அரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் முகாம் நடந்தது.
