ADDED : டிச 14, 2025 08:50 AM
மொரப்பூர்: தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில்,மொரப்பூர் ஒன்றியத்தில் செயல்படும் முதல்வரின் காலை உணவு திட்டத்தில் பணிபுரியும் சமையலர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி, மொரப்பூர் ஒன்றிய பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, பயிற்சியின் நோக்கம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து செயல் விளக்கங்களையும், சமைக்கும் போதும்,பரிமாறும் போதும் கடைபிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு விதிமுறைகளைவிளக்கினார்.
பயிற்சியானது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பயிற்சியாளர் மூலம் வழங்கப்பட்டது. பயிற்சியில், தன் சுத்தம், வெளிப்புறச்சுத்தம், பூச்சி மேலாண்மை, உணவு பொருட்களை வாங்கும் போதும்,உபயோகிக்கும் போதும் பொட்டலங்களின் மீது காண வேண்டிய அம்சங்களை பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில்,90க்கும் மேற்பட்ட சமையலர்கள் கலந்து கொண்டனர்.
