/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கருவில் சிசுவின் பாலினம் கண்டறிந்த கும்பல் கைது
/
கருவில் சிசுவின் பாலினம் கண்டறிந்த கும்பல் கைது
ADDED : ஜூன் 29, 2024 02:15 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே, கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்த போலி மருத்துவ கும்பலை, மாவட்ட சுகாதார துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
தர்மபுரி மாவட்டம், எர்ரபையனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட நெக்குந்தி அடுத்த முத்தப்பா நகரை சேர்ந்த லலிதா, 42, என்ற இடைத்தரகர் மூலம், கருவுற்ற பெண்களுக்கு கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிவதாக, தர்மபுரி மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட சுகாதார பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர், போலீசார் நெக்குந்தி அடுத்த முத்தப்பா நகருக்கு சென்றனர்.
அங்கு வீட்டில் இருந்த அனைவரையும் பிடித்தனர். இதில் கருவுற்றிருந்த நான்கு பெண்களிடம் தலா, 13 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டு, ஸ்கேன் மிஷின் மூலம் பரிசோதனை செய்து, கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்தது தெரியவந்தது. இதில், முக்கிய நபரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், 48; என்பவர் பெண்களுக்கு சிசுவின் பாலினம் குறித்து கண்டறிந்து தெரிவித்துள்ளார். முருகேசன் ஏற்கனவே, மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் தொடர்புடைய நடராஜன், 40, சின்ராஜ், 28 மற்றும் பெண் இடைத்தரகர் லலிதா ஆகியோரை கைது செய்தனர்.