/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மினிஸ்டரா வந்து ஆர்டர் போடுவார்' நக்கலடித்த டி.இ.இ.ஓ., இடமாற்றம்
/
மினிஸ்டரா வந்து ஆர்டர் போடுவார்' நக்கலடித்த டி.இ.இ.ஓ., இடமாற்றம்
மினிஸ்டரா வந்து ஆர்டர் போடுவார்' நக்கலடித்த டி.இ.இ.ஓ., இடமாற்றம்
மினிஸ்டரா வந்து ஆர்டர் போடுவார்' நக்கலடித்த டி.இ.இ.ஓ., இடமாற்றம்
ADDED : ஜூலை 12, 2025 01:49 AM
அரூர் :அரூரில் நடந்த, மலைச்சுழல் பணி மாறுதல் கலந்தாய்வின்போது, 'மினிஸ்டரா வந்து ஆர்டர் போடுவார்' என, நக்கலாக கூறிய, டி.இ.இ.ஓ., இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தில் மலை கிராமங்களிலுள்ள, அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, 2025-26ம் ஆண்டுக்கான மலைச்சூழல், பணி மாறுதல் கலந்தாய்வு கூட்டம் கடந்த, 2ல் அரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னமாது தலைமையில் நடந்தது.
அப்போது, பொதுமாறுதல் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகளை, முழுவதும் பின்பற்றாமல் விதிமுறைகளுக்கு புறம்பாக, அரூர் கல்வி மாவட்டத்தில் கலந்தாய்வு நடப்பதாக கூறி, கல்வி அலுவலர் சின்னமாதுவை முற்றுகையிட்டு, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மலைச்சூழல் கலந்தாய்வு மூலம், மலை கிராமங்களில் உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும் என்பது தான் விதி. ஆனால், மலை கிராம பள்ளிகளில், பதவி உயர்வு மூலம் தான் நிரப்ப வேண்டும் எனக்கூறி, கடந்த இரு ஆண்டுகளாக, அரூர் ஒன்றியத்தில் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.
எனவே, அவற்றை உடனே நிரப்ப வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை, அரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னமாது ஏற்க மறுத்தார். மேலும், 'நான் யார், மினிஸ்டரா வந்து ஆர்டர் போடுவார், நான் தான் போடுவேன், என்னை மீறி இங்கு ஒன்றும் நடக்காது' என, நக்கலாக கூறியதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதில், ஆசிரியர்களின் புகாருக்கு உள்ளான அரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னமாது, நீலகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ராணிப்பேட்டையில் மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) பணிபுரிந்த விஜயக்குமார், அரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.