/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மஞ்சள் பயிரில் இலை சுருட்டு நோய் தாக்குதல் சாகுபடி விவசாயிகள் கவலை
/
மஞ்சள் பயிரில் இலை சுருட்டு நோய் தாக்குதல் சாகுபடி விவசாயிகள் கவலை
மஞ்சள் பயிரில் இலை சுருட்டு நோய் தாக்குதல் சாகுபடி விவசாயிகள் கவலை
மஞ்சள் பயிரில் இலை சுருட்டு நோய் தாக்குதல் சாகுபடி விவசாயிகள் கவலை
ADDED : டிச 22, 2025 08:38 AM

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார், மொரப்பூர் வட்டாரத்தில், மெணசி, மோளையானுார், பொம்மிடி, விழுதிப்பட்டி, மஞ்சவாடி, இராணிமூக்கனுார், வெங்கடதாரஹள்ளி, புதுார், அய்யம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள், கொய்யா, வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டில், மஞ்சள் ஒரு குவிண்டால், 1,800 ரூபாய் வரை விலை போனது. இதனால் விவசாயிகள் மஞ்சள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டினர். தற்போது, மழை மற்றும் பனியால் இப்பகுதியில் மஞ்சள் பயிரில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.
மஞ்சள் பயிரில் இலை கருகல், இலைப்புள்ளி மற்றும் கிழங்கு அழுகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மஞ்சள் இலை நுனியில், முதலில் கரும் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, நாளடைவில் அது பெரிதாகி, இலை முழுவதும் காய்ந்து சருகாக மாறி விடுகிறது. நோய் தாக்குதல் தீவிரம் அடையும்போது, வயல் பகுதி முழுவதிலும் இலைகள் காய்ந்து கீழே விழுகிறது. நோய் தாக்குதல் காரணங்களால், மஞ்சள் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, மஞ்சள் சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார், மொரப்பூர் வட்டாரத்தில், 5,000 ஏக்கருக்கு மேல், விவசாயிகள் மஞ்சள், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால், மஞ்சள் பயிர் கடுமையாக பாதித்துள்ளது. அதில், இலை சுருட்டு, இலை புள்ளி நோய் தாக்குதல் உருவாகியுள்ளது. தற்போது மஞ்சள் பயிரில், கிழங்கு வரும் சமயத்தில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.
இந்த நோய் தாக்குதலில் இருந்து விடுபட, பயிரை காப்பாற்ற, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் வந்து பார்க்கவில்லை. அப்பயிரை காப்பாற்ற, என்ன செய்வது, என்ன மருந்து அடிப்பது என, எந்த ஒரு தகவலும் கூறுவதில்லை. இதனால், பல ஏக்கர்களில், மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல், நேரடியாக கள ஆய்வு செய்து, நோய் தாக்குதலில் இருந்து, மஞ்சள் பயிரை எவ்வாறு காப்பாற்றுவது என, விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

