/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரக்கன்றுகள் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நண்பர் குழு
/
மரக்கன்றுகள் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நண்பர் குழு
மரக்கன்றுகள் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நண்பர் குழு
மரக்கன்றுகள் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நண்பர் குழு
ADDED : மார் 10, 2025 05:32 AM
இலவச மரக்கன்றுகள் வங்கி திட்டத்தின் மூலம் ரோட்டோரங்கள், பள்ளி, கல்லுாரிகள், பொது இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றனர் இலக்கில்லா மரங்கள் நடும் நண்பர் குழுவினர்.
கரந்தமலை, அழகர்கோவில்மலை, சிறுமலை, கடவூர்மலை என மலைகள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் நகராக நத்தம் உள்ளது.
இயற்கைக்கு பஞ்சமில்லாத இப்பகுதியில் இலக்கில்லா மரக்கன்றுகள் நடும் நண்பர் குழுவில் உள்ள தன்னார்வ இளைஞர்கள் பள்ளிகள் தோறும் மரக்கன்றுகள் கொடுத்து, மாணவர்கள் இடையே மரக்கன்று நடும் பழக்கத்தை உருவாக்குவதுடன், பல்லாயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து இயற்கைக்கு மெருகூட்டி உள்ளனர்.
இவர்கள் அரசு பள்ளிகள் கல்லுாரிகள்,நீதிமன்ற வளாகம் கிராமங்களில் உள்ள குளக்கரைகளில் பனை விதைகள் நடுவது, திருமண விழாக்களில் இலவச மரக்கன்றுகள் கொடுப்பது, தரிசாக உள்ள நிலங்களிலும் ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் பலன் தரும் மா, கொய்யா, எலுமிச்சை, தென்னை உள்ளிட்ட மரங்களை நட்டு வளர்த்து வருகின்றனர்.
நத்தம் புதுப்பட்டியை சேர்ந்த பட்டதாரி தேவேந்திரன் உடன் 80க்கு மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து நத்தம்,சிறுகுடி, அரவங்குறிச்சி,லிங்கவாடி, கோவில்பட்டி, வேலம்பட்டி என நத்தம் பகுதி மட்டுமல்லாது, திண்டுக்கல் காவலர் குடியிருப்பு, வடமதுரை, அய்யலுார், சாணார்பட்டி,மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மரக்கன்று நடும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
தண்ணீருக்கும் விலை
ப.தேவேந்திரன், தலைவர், இலக்கில்லா மரங்கள் நடும் நண்பர் குழு, நத்தம்: மரங்களின் முக்கியத்துவத்தை உணராமல் தொடர்ந்து மரங்களை அழிப்பதால் பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு எதிரான கால நிலை மாற்றம், பூமி வெப்பமாதல் இயற்கை சீற்றங்கள் என சுற்றுச் சூழல் மாறுகிறது.
இதனால் ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்க்கு வாங்கி பருகும் சூழ்நிலை வந்துவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக பூமி மாறிவிடும்.
ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு மரங்களை நடவு செய்து வளர்ப்பதே ஒரே வழி. 8 ஆண்டுகளுக்கு மேலாக நத்தத்தில் இலக்கில்லா மரங்கள் நடும் நண்பர் குழு என ஒரு அமைப்பை உருவாக்கி பல்லாயிரம் மரங்களை நடவு செய்துள்ளோம்.
சமூக சேவைகள்
ஆரிப், பசி இல்லா நத்தம் அறக்கட்டளை, நத்தம்: 2017 முதல் 17 தன்னார்வலர்களுடன் தொடங்கிய இந்த அமைப்பு தற்போது நுாற்றுக்கு மேற்பட்ட இளைஞர்களை கொண்டு செயல்படுகிறது.
இவர்களின் இந்த சேவையை பாராட்டி முன்னாள் தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோஹித் காந்தி விருது, திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவு பனை விதைகள் விதைத்ததற்காக வழங்கப்பட்டது.
மரக்கன்றுகள் நடுவதோடு மட்டுமல்லாமல் ஆதரவற்ற முதியோருக்கு உணவுகள் வழங்குவது, வறுமையில் வாடும் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, ரோட்டோரங்களில் சுற்றித்திரியும் நாய்க் குட்டிகளை மீட்டு அதற்கு புதிய குடும்பத்தை உருவாக்கிக் கொடுப்பது போன்ற பல்வேறு சமூக சேவைகளையம் செய்கின்றனர்.

