/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமடைந்த ரோடுகள்; நெருக்கடியில் அங்கன்வாடி சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 5 வது வார்டு மக்கள்
/
சேதமடைந்த ரோடுகள்; நெருக்கடியில் அங்கன்வாடி சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 5 வது வார்டு மக்கள்
சேதமடைந்த ரோடுகள்; நெருக்கடியில் அங்கன்வாடி சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 5 வது வார்டு மக்கள்
சேதமடைந்த ரோடுகள்; நெருக்கடியில் அங்கன்வாடி சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 5 வது வார்டு மக்கள்
ADDED : மார் 08, 2025 06:15 AM

ஒட்டன்சத்திரம் : ''சேதமடைந்த ரோடுகள் நெருக்கடியான இடத்தில் அங்கன்வாடி மையம்'' என ஒட்டன்சத்திரம் 5 வது வார்டில் தீர்க்கப்படாத பிரச்னைகள் அதிகம் உள்ளன.
சத்யா நகர், ஏ.பி.பி நகர் கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. சாக்கடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து உள்ளது. பல இடங்களில் சாக்கடை குறுகலாக இருப்பதால் கழிவுநீர் தேங்கி உள்ளது. அவற்றுக்கு பதிலாக சாக்கடை அமைக்க வேண்டும். இங்குள்ள அங்கன்வாடி மைய கட்டடம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது இந்த இடத்தில் புதிதாக கல்யாண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இரு வார்டுகளுக்கும் சேர்த்து ஒரே கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. தெருப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் கடைக்கோடியில் உள்ள வீடுகளுக்கு செல்வது சிரமமாக உள்ளது. குடிநீர் குழாய் போடுவதற்காக தெரு ரோடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனை விரைந்து சீரமைக்க வேண்டும். பல இடங்களில் தெரு விளக்கு இல்லை . மகளிர் சுகாதார வளாகம் அடுத்த வார்டுக்குள் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த சிரமப்படுகின்றனர்.
சீரமைக்கப்படாத ரோடுகள்
நாகராஜ், கூலி தொழிலாளி சத்யா நகர்: குழாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. குறுகலான சாக்கடையில் தேங்கிய கழிவு நீரால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது.
அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும். தேவையான இடங்களில் கூடுதலாக தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
மின் கோபுரம் கீழே குப்பை
திருமூர்த்தி, ஊர் நாட்டாமை: சாக்கடைகளை அடிக்கடி துார்வார வேண்டும். விநாயகர் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் கட்டுவதற்கான முயற்சி இல்லை. இதனால் நெருக்கடியான இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மின் கோபுரத்தின் கீழே குப்பையை கொட்டுகின்றனர்.இதை அகற்ற வேண்டும்.
விரைவில் புதிய கட்டடம்
சாந்தி,கவுன்சிலர் (தி.மு.க,): ரேஷன் கடை வேண்டுமென அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்தோம். அதன் பயனாக நுாலகம் அருகில் புதிய கடை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இங்கிருந்த பழைய கடையை இடித்துவிட்டு புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போர்வெல்கள் சரி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தண்ணீர் பிடிக்கும் வகையில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. விநாயகர் கோயில் அருகே ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
புதிதாக சாக்கடை, தெருக்களில் சிறுபாலங்கள், ரோடு வசதி அமைக்க நகராட்சி நிதி ஒதுக்கி உள்ளது. காவிரி குடிநீர் குழாய் பணிகள் முடிந்தவுடன் ரோடுகள் சீரமைக்கப்படும் என்றார்.