/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆங்கில வழி சேர்க்கை அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
/
ஆங்கில வழி சேர்க்கை அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
ADDED : மே 27, 2024 06:10 AM
ரெட்டியார்சத்திரம் : அரசு பள்ளி ஆசிரியர்களின் இருட்டடிப்பு நடவடிக்கைகளால் நிறுத்தப்பட்ட ஆங்கிலவழி மாணவர் சேர்க்கையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் அதிகளவில் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி கல்வி தரத்தை உயர்த்த ஆங்கில வழி கல்வி முறையை 4 ஆண்டுகளுக்கு முன் அரசு நடைமுறைப்படுத்தியது.
ஒன்றியம் வாரியாக 10 பள்ளிகள் என அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறை அடுத்த சில மாதங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
கூடுதல் ஆசிரியர் பணியிடங்களோ,பயிற்சி முறைகளோ உரிய கட்டமைப்புகள் மூலம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. 2019, 2020, 2021 ஆகிய கல்வி ஆண்டுகளின் துவக்கத்தில் இந்த முறைக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. இருப்பினும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களின் மறைமுக ஒத்துழையாமை, இருட்டடிப்பு முயற்சிகள் படிப்படியாக அதிகரித்தது.
ஆங்கில வழி மாணவர் சேர்க்கையை தவிர்த்து தமிழ் வழியில் சேர்க்கையை பெற்றோர்களிடம் வலியுறுத்தி ஆசிரியர்களின் 'கேன்வாஷ்' நடந்தது.
ஆங்கில வழி கற்பித்தலுக்கான ஆசிரியர்கள், பாடப் புத்தகங்கள், பயிற்று முறையில் கூடுதல் கவனம் அளிக்க முடியாது என்பது உள்ளிட்ட காரணங்களை கூறி தனியார் பள்ளிகளுக்கு அனுப்பினர்.
2 ஆண்டுகளாக பல அரசு துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 1, 6ம் வகுப்புகளில் மூன்று இலக்க எண்ணிக்கையில் இருந்த மாணவர் சேர்க்கை தற்போது ஓரிலக்கமாக குறைக்கப்பட்டு உள்ளது. பல கிராமப்புற பள்ளிகள் சேர்க்கை குறைந்து மூடப்படும் அவல நிலையை எட்டியுள்ளன.
உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவி குழுவினர், தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர் ஆகியோரை கொண்ட பள்ளி மேலாண்மை குழுக்களும் இப்பிரச்னையை கண்டு கொள்ளவில்லை. அரசு பள்ளிகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் ஆங்கில வழி சேர்க்கையை மீண்டும் அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

