ADDED : ஜூலை 02, 2024 05:56 AM

திண்டுக்கல் : குடியிருக்கும் வீட்டை போலி பட்டா சான்றிதழ் வாங்கி அபகரித்ததாக கூறி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர் கூட்டத்திற்கு வந்த தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. 298 மனுக்கள் பெறப்பட்டதில் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார். 20 பயனாளிகளுக்கு ரூ.1.21 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பூங்கொடி வழங்கினார்.
25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த 4 தனி தாசில்தார்கள், ஒரு முதுநிலை வருவாய் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சரவணன், வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, மாவட்ட வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குநர் பிரபாவதி கலந்துகொண்டனர்.
தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் அம்பாத்துரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி குமரேசன் 55. கட்டட தொழிலாளியான இவர் அதேபகுதியில் 25 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்.
இவரது வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் போலி பட்டா சான்றிதழ் வாங்கி அபகரித்ததாக கூறி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். குமரேசன் கூறியதாவது: போலி பட்டா மூலம் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, மன அழுத்தத்தில் இருந்த நான் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.
ஆக்கிரமிப்பில் கிணறு
பழநி கோதைமங்களம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ஊரின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் கிணறு பழநி பெரியா உடையார் கோயில் செல்லும் பாதையில் உள்ளது.
தனி நபர் ஒருவர் இந்த கிணற்றை சுற்றிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து துார் வார விடா மல் தடுக்கும் வகையில் நீரைத் தேக்கி ரசாயன மருந்து, உரங்களை கலந்து விடுகிறார். இதனால் குடிநீர் மாசடைந்து உடலுக்கு தீங்கு ஏற்படும் நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.