/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிவு நீர் ஓடையில் குப்பை; விரிவாக்கப் பகுதிகளில் இல்லை சாக்கடை
/
கழிவு நீர் ஓடையில் குப்பை; விரிவாக்கப் பகுதிகளில் இல்லை சாக்கடை
கழிவு நீர் ஓடையில் குப்பை; விரிவாக்கப் பகுதிகளில் இல்லை சாக்கடை
கழிவு நீர் ஓடையில் குப்பை; விரிவாக்கப் பகுதிகளில் இல்லை சாக்கடை
ADDED : செப் 07, 2024 07:19 AM

ஒட்டன்சத்திரம்: துார்வாரப்பட்ட கழிவுநீர் ஓடையில் குப்பையை கொட்டுவதால் சுகாதாரம் பாதிப்பு, விரிவாக்கப் பகுதிகளில் சாக்கடை வசதி இல்லாமை என ஒட்டன்சத்திரம் நகராட்சி 18 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
திடீர் நகர், வள்ளுவர் நகர், காவேரி நகர், ஏ. எம். கே.நகர், வண்ணாம்பாறை, கருப்பணபுரம், காந்தி நகர் கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டானது திண்டுக்கல் - கோவை அகல ரயில் பாதைக்கு தென்புறத்தில் அமைந்துள்ளதால் ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு இப்பகுதி மக்கள் ரயில்வே லைனை தாண்டி வர வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதி மக்கள் ரயில்வே லைனை கடப்பதற்கு ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு, மேற்கு பகுதிகளில் சுரங்கப்பாதை உள்ளது. ரயில்வே ஸ்டேஷனையொட்டிய பகுதியில் ஒரு ரயில்வே கேட்டும் உள்ளது. மழைக்காலத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குகிறது. திடீர் நகர் பகுதியில் சாக்கடைகள் அமைத்து பல ஆண்டுகளுக்கு மேல் ஆகுவதால் சிதிலமடைந்து காணப்படுகிறது .இதனை சீரமைக்க வேண்டும். விரிவாக்கப் பகுதிகளில் சாக்கடை , தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். குடிநீரும் தேவையான அளவுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
சப்வே பகுதியில் ஆக்கிரமிப்பு
எம்.செல்லபாண்டி, அ.தி.மு.க., மாணவரணி நகர செயலாளர். கருப்பணபுரம்: சப்வே பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை அகலப்படுத்தி சப்வேயை அகலமாக்க வேண்டும். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால் ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.சாக்கடையை துார்வார தாமதமாகும் போது கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது.
தேவை வடிகால் வசதி
கே.மகுடீஸ்வரன், அரசு தொடர்பு பிரிவு பா.ஜ., மாவட்ட தலைவர் : விரிவாக்கப் பகுதிகள் அதிகரித்து வருவதால் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இங்கு சாக்கடை , தேவையான இடங்களில் தெரு விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும். குடிநீர் பிரச்னை அறவே இல்லை. தெருக்கள் சந்திக்கும் இடங்களில் உள்ள ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. திடீர் நகர் பகுதியில் சாக்கடையை சீரமைக்க வேண்டும். குழாய்கள் அமைக்க தோண்டப்பட்ட பேவர் பிளாக் கற்கள் ரோடு சேதமடைந்துஉள்ளது.
நீண்ட காலபிரச்னைக்கு தீர்வு
கிருஷ்ணமூர்த்தி கவுன்சிலர் (தி.மு.க.,): திடீர் நகர், வள்ளுவர் நகர், ஏ.எம்.கே.நகர் பகுதிகளில் அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்ததின் பயனாக புதிய குழாய்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. ஏ.எம்.கே.நகரில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டு பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது. ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வள்ளுவர் நகரில் தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்.