/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கும் குடகனாறு
/
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கும் குடகனாறு
ADDED : மே 02, 2024 06:12 AM

திண்டுக்கல்: ஆக்கிரமிப்பு, நீர் வழித்தடங்கள் அழிப்பு, கழிவுகளை கொட்டுதல், மணல் கொள்ளை, எங்கு பார்த்தாலும் சீமை கருவேல மரங்கள் என ஏராளமான பிரச்னைகளில் குடனாறு சிக்கி தவிக்கிறது. இதை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடகனாறு ஆத்துார், திண்டுக்கல்,வேடசந்துார் வட்டங்களின் வழியாகவும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வழியாகவும் 109 கி.மீ.,துாரம் பாய்ந்தோடி அமராவதி நதியோடு கலக்கிறது. உற்பத்தி பகுதியில் 6 மீ அகலமும் சங்கமிக்கும் பகுதியில் 100 மீ அகலமும் உடைய குடகனாறு 19 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 13,268.812 ஏக்கர் பாசன பரப்பளவு பகுதிகளுக்கு பயனளிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது குடகனாற்றை கருவேல மரங்கள் முழுமையாக ஆக்கிரமித்து புதர்மண்டி கிடக்கிறது. பல ஆண்டுகளாக குடகனாற்றில் துார்வாரும் பணியும் மேற்கொள்ளப்படவில்லை.குடகனாற்றின் வழித்தடம் முழுவதும் புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலத்தில் குடகனாற்றில் தண்ணீர் வந்தாலும் கூட அது அழகாபுரி அணையை சென்றடையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் செல்லும் போது கரைகள் உடைந்து விளைநிலங்களுக்குள் மழைநீர் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும் அபாயம் உள்ளது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன் குடகனாற்றை துார்வாருவதுடன், கருவேல மரங்களையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். ஊராட்சி பகுதிகளிலிருந்து திடக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டி குடனாற்றை நாசம் செய்கின்றனர். நீர் இல்லாததால் மணல் கொள்ளை தாரளமாக நடக்கிறது. நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதோடு அதன் வழித்தடங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம், நரசிங்க புரம் வாய்க்காலில் உயரமாய் கட்டப்பட்ட இணைப்பு தடுப்பு சுவர் குடகனாறு நீரை எடுக்கிறெதென்றால் மறுபுறம் அதே வேலையை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காமராஜர் நீர்தேக்கமும் செய்கிறது.காமராஜர் நீர்த்தேக்கம் உருவான காலத்திலிருந்து இன்றுவரை குடகனாறும் கூழையாறும் இணைந்து வரும் இடத்திலிருந்து இதுவரை குடகனாறு ஆற்றுக்கென தனியாக எந்தவொரு வழித்தடத்தையும் உருவாக்கி கொடுக்காமலே வைத்துள்ளது.
வழித்தடத்தை மீட்க வேண்டும்
ராமசாமி,தலைவர் குடகனாறு பாதுகாப்பு சங்கம், வேடசந்துார் : குடகனாறு நீரை பெரியாறு எனப் பெயர்மாற்றம் செய்து மடைமாற்றி மரபுவழித்தடத்தை அழித்து சட்டத்திற்கு புறம்பாக உருவாக்கப்பட்ட நரசிங்கபுரம் வாய்க்கால் தடுப்புசுவரை முழுமையாக அகற்றி கொடுக்க வேண்டும். காமராஜர் நீர்தேக்கத்தின் முகப்பில் துவங்கி மறுகால் செல்லும் பகுதி வரை காணாமல் போன குடகனாறு வழித்தடத்தை மீண்டும் தனியாக உருவாக்கி வழித்தடத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளால் குறுகிய நிலையில் கிடக்கும் குடகனாறு வழித்தடத்தை சர்வே செய்து முழுமையான வழித்தடங்களை உற்பத்தியாகும் பகுதியிலிருந்து கடைமடைவரை மீட்டுக்கொடுக்க வேண்டும்.
மக்கள் பயன்பாட்டிற்கு வேண்டும்
தமிழ்வாணன்,விவசாயி,தாடிக்கொம்பு : குடகனாற்றில் கலக்கும் திண்டுக்கல் தோல் தொழிற்சாலை கழிவுகள்,திண்டுக்கல் மாநகராட்சி, ஊரகப்பகுதிகளிலிருந்து கொட்டப்படும் கழிவுநீர், ஸ்பின்னிங் மில் ரசாயனகழிவு நீர் ஆகியவற்றை முறையாக மறுசுழற்சி செய்து நிலத்தடி நீரையும், மண்வளத்தையும் பாதுகாத்திட வேண்டும். குடகனாறு மீண்டும் அனைத்த கிராம மக்களும் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும்
கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
செல்வன், குடனாறு பாதுகாப்பு சங்கம், திண்டுக்கல் : நிலத்தடி நீரையும், காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கருவேல மரங்களை வெட்டி அகற்றப்பட வேண்டும். அப்போது தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும். கோடை காலம் முடிவதற்குள் கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடகனாறையும் துார்வார விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

