/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வறண்ட சூழலில் நாயக்கர் கண்மாய்;கவலையில் விவசாயிகள்
/
வறண்ட சூழலில் நாயக்கர் கண்மாய்;கவலையில் விவசாயிகள்
வறண்ட சூழலில் நாயக்கர் கண்மாய்;கவலையில் விவசாயிகள்
வறண்ட சூழலில் நாயக்கர் கண்மாய்;கவலையில் விவசாயிகள்
ADDED : செப் 07, 2024 07:20 AM

ரெட்டியார்சத்திரம்: காமாட்சிபுரம் நாயக்கர் கண்மாய் பெயரளவு பராமரிப்பு கூட இல்லாத சூழலில் மண் திருட்டு பிரச்னையால் இயற்கை வளத்தை இழந்து வருகிறது. வரத்து மழைநீரையும் தேக்கி வைக்க முடியாத அவல நிலை உள்ளது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காமாட்சிபுரம் ஊராட்சியில் எல்லைப்பட்டியில் இருந்து கெம்மனம்பட்டி செல்லும் ரோட்டில் நாயக்கர் கண்மாய் உள்ளது. வேலை உறுதி திட்டத்தின் மூலம் இதன் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெற்றாலும் இவை ஏட்டளவில் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருவதாக இப்பகுதியினர் புகார் கூறுகின்றனர். மண் திருட்டு தாராளமாக நடப்பதால் அடிப்பகுதி துார்ந்து, சொற்ப மழை நீரும் தேங்கி நிற்க முடியாத அளவிற்கு கண்மாய் வறண்ட சூழலில் காட்சியளிக்கிறது.
சுற்றிய விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. போதிய நிலத்தடி நீர் ஆதாரமற்ற சூழலில் காய்கனி சாகுபடி பணிகளும் தொடர்ந்து நஷ்டத்தை ஏற்படுத்துவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பெயரளவில் மட்டுமே பராமரிப்பில் உள்ள இக்கண்மாய், இப்பகுதி சாகுபடி பணிகளுக்கு பலனளிக்காத நிலை உள்ளது. நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் மேம்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த முன்வர வேண்டும்.
பராமரிப்பில் அலட்சியம்
விஜயராஜ், பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி, கெம்மனம்பட்டி: 5 ஏக்கர் கொண்ட இக்கண்மாய் மூலம் 10 கிலோ மீட்டர் சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கும் வாய்ப்பு உள்ளது. மழைக்காலங்களில் காட்டு ஓடைகள் வழியே வரும் தண்ணீர் மட்டுமே வரத்து ஆதாரமாகும். இதனை பராமரிப்பதில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. பராமரிப்பு பெயரில் பெருமளவில் முறைகேடுகள் தொடர்கின்றன. முழுமையாக வழித்தடம் இல்லை. ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.
மண் திருட்டு தாராளம்
ராமச்சந்திரன், பா.ஜ., விவசாய அணி ஒன்றிய தலைவர், கெம்மனம்பட்டி :ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஆவண அடிப்படையில் மட்டுமே கண்மாயை பராமரிக்கின்றனர். கரைப் பகுதிகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது. நீர் தேங்கும் பகுதி, கரை, சுற்றுப்புறங்களில் முள், புதர் செடிகள் அடர்ந்துள்ளன. இயந்திரங்கள் மூலம் மண் திருட்டு தாராளமாக நடக்கிறது.
நீர் தேங்க முடியாத அவல நிலை உள்ளது. உள்பகுதி மட்டுமின்றி கரையின் பக்கவாட்டு பகுதியையும் சுரண்டி மண் திருடியுள்ளனர். கரை பலம் இழந்த நிலையில் உள்ளது.