/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பராமரிப்பின்றி கேட்பாரற்று கிடக்கும் லிங்கம்மாள் குளம்
/
பராமரிப்பின்றி கேட்பாரற்று கிடக்கும் லிங்கம்மாள் குளம்
பராமரிப்பின்றி கேட்பாரற்று கிடக்கும் லிங்கம்மாள் குளம்
பராமரிப்பின்றி கேட்பாரற்று கிடக்கும் லிங்கம்மாள் குளம்
ADDED : ஆக 30, 2024 05:58 AM

திண்டுக்கல் : பாரமரிப்பின்றியும் கழிவுநீர் தேங்குமிடமாகவும் மதுபிரியர்களின் கூடாரமாக மாறும் சூழல் என பல்வேறு பிரச்னைகளோடு காட்சியளிக்கிறது திண்டுக்கல் லிங்கம்மாள் குளம்.திண்டுக்கல் - தாடிகொம்பு மெயின் ரோடு ஆர்.எம்.காலனி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீர் ஆதாரமாக இருந்தது லிங்கம்மாள் குளம் .
இந்த குளத்தை பொறுத்தவரையில் 10 ஆண்டுகளாக மாசுபட்டு வருகிறது. மழை பெய்தால் மட்டுமே நிரம்பும் இந்த குளம் தற்போது பராமரிப்பின்றி கேட்பாரற்று கிடக்கிறது. குளத்தின் 4 மூலைகளிலும் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வெளியிலிருந்து கழிவுகள் குளத்திற்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் குளம் மாசுபட்ட கழிவுநீருடன் காட்சியளிக்கிறது. அதோடு செடிகள் ஆள் உயரத்திற்கு வளர்ந்துள்ளன. குளத்தை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ள சமீபத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. இது என்னவோ மதுப்பிரியர்களுக்கு வசதியாகி விட்டது. இரவு நேரங்களில் மது கூடாரமாக மாறுகிறது. மழை பெய்தால் கொசு உற்பத்தியாகும் இடமாகிறது. அருகிலே தனியார் பள்ளியும் இருக்கிறது. நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். வரும் காலம் மழைக்காலம் என்பதால் இதனை கவனத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்க
தேவராஜ், செயலாளர், புஷ்பம்மாள் நகர் ,சோபா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் :சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநகராட்சியின் 7 வார்டுகளுக்கு இந்த குளம் தான் குடிநீர் ஆதாரமாக இருந்தது. ஆனால் தற்போது மாசடைந்து காணப்படுகிறது. கழிவுநீர் தேங்குதல் நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. இக்குளத்தை பாரமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துார்வாரி, நடைபாதை இருக்கைகள் போன்றவை ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கழிவுநீர் குளத்தை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
துார்வாரினாலே போதும்
ராதாகிருஷ்ணன், தலைவர், பண்ணை குடியிருப்போர் நலச்சங்கம் :குளத்தைச் சுற்றி அதிகளவில் குடியிருப்புகள் வந்து விட்டன. இன்னும் அதிகரிக்கவே செய்யும். இந்த குளத்தை துார்வாரி குளத்தை சுற்றி கம்பிகள் அமைத்து கழிவுகள், குப்பை கொட்டுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும். நடைபயிற்சிக்காக பேவர் பிளாக் கற்கள் உள்ளன. சுற்றிலும் விளக்குள் அமைத்தால் இரவு நேரங்களில் குழந்தைகள், பெரியவர்களின் பொழுதுபோக்கிடமாக மாறும். குளமும் மாசடையாது.
முன்னெச்சரிக்கை தேவை
விக்னேஷ், தாடிகொம்பு ரோடு :குளத்திற்கு வரும் கழிவு நீரை நிறுத்தினாலே குளம் மாசடையாது. இந்த குளத்தை ஒரு முறை துார்வாரினாலே போதும் அடுத்த முறை மழை பெய்யும் போது நல்ல நீராக இருக்கும். அதனை பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதி என்பதால் நோய்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.

