ADDED : மே 02, 2024 06:13 AM

மே தின ஊர்வலம்
பழநி: பழநியில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தினர் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு,மே தின ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி., தனஞ்ஜெயன் துவங்கி வைத்தார். ஊர்வலத்தில் நுாற்றுக்கணக்கானோர் ஹெல்மெட் அணிந்து திண்டுக்கல் ரோடு, மயில் ரவுண்டானா, வேல் ரவுண்டானா, காந்தி மார்க்கெட் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொடியேற்று விழா
நத்தம்: நத்தத்தில் மே தினத்தையொட்டி தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் நத்தம் கிளை சார்பில் கொடியேற்று விழா நடந்தது. துணை தலைவர் ரஹீம் தலைமை தாங்கினார். செயலாளர் சிவசங்கர் முன்னிலை வகித்தார். சங்க அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டு கைலாசநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இனிப்புகள் வழங்கபட்டது. இதைப் போல நத்தம் இருசக்கர வாகன பழுதுநீக்குவோர் சங்கம் சார்பிலும் மே தின கொடியேற்று விழா நடந்தது.
நீர் மோர் பந்தல் திறப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர தி.மு.க.,சார்பில் பேகம்பூர்,நாகல் பகுதியில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ராஜப்பா,மேயர் இளமதி, மாநகர தலைவர் முகமது இப்ராகிம்,துணை செயலாளர்கள் சித்திக்,அழகர்சாமி,பொருளாளர் சரவணன்,பகுதி செயலாளர்கள் பஜ்லுல்ஹக்,சந்திரசேகர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., வீடியோ வைரல்
பழநி: பழநியில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பங்கேற்றார். அதன்பின் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கார் அருகே, நடந்த நிகழ்ச்சி வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அ.தி.மு.க.,வினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

