/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இனப்பெருக்க கட்டுப்பாட்டில் இல்லை ஆர்வம்
/
இனப்பெருக்க கட்டுப்பாட்டில் இல்லை ஆர்வம்
ADDED : ஏப் 30, 2024 05:10 AM

வடமதுரை : இனப்பெருக்க கட்டுப்பாடு நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக இல்லாததால் பெருகும் நிலையால் நாய்களின் வாழ்க்கை முறை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. மக்களும் நாள்தோறும் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர்.
மனிதனை சார்ந்து வாழும் விலங்கினங்களில் நாய் முதன்மையானது. இவற்றில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது போதிய உணவு கிடைக்காமல் கோழி, ஆடு, மாடுகளை கடிக்க துவங்குகிறது.
நாய்க்கடியால் 'ரேபிஸ்' எனும் கொடிய நோய் ஆபத்தும் உள்ளது. இப்பிரச்னையில் வருமுன் காக்கும் நடவடிக்கையாக தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த 2007ல் தி.மு.க., அரசு அனுமதி தந்தது.
அடுத்து முதல்வரான ஜெயலலிதா இதில் அதிக கவனம் செலுத்த கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார். மாநில அளவில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வீடு, தெருக்களில் வாழ்ந்த நாய்களுக்கு அரசு செலவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனால் இனப்பெருக்கம், நாய்க்கடி பிரச்னை குறைந்தது. அதன்பின் ஆண்டுகள் 11 கடந்தும் பேரூராட்சிகளில் நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு நடவடிக்கை அறவே இல்லை. இதனால் பல ஊர்களில் நாய்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.-
பெண் இனத்தின் சோகம்
-குடியிருப்பு பகுதிகளில் யாருடைய பராமரிப்பு இல்லாமல் திரியும் பெண் இன நாய்கள் கருத்தரித்து குட்டிகள் ஈனும்போது, ஆண் குட்டிகளை மட்டும் எடுத்து சென்று வளர்க்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரம் பெண் குட்டிகளை வளர்க்க யாரும் விரும்புதில்லை.
இவைகள் உணவு தேடும் பக்குவம் கூட இல்லாத நிலையில் பசியால் துடிப்பது விலங்குகளை நேசிப்போருக்கு பெரும் வேதனையை தருகிறது. இவ்வாறு பல துயரங்களை கடந்து வளரும் பல நாய்கள் பலவித நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன.
இவற்றிற்கு மருத்துவம் பார்க்க யாரும் இல்லாத நிலையில் நோய் பாதிப்புடைய நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து நாய் இனத்திற்கு மட்டுமின்றி மனித இனத்திற்கும் நோய் பரப்பும் நிலை உள்ளது.
ரோடுகளில் திரியும் நாய்க்குட்டிகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், போதிய உணவின்றி வாடி வதங்கிய நிலையில் இருக்கும் காட்சிகள் இரக்க குணம் கொண்ட நெஞ்சகங்களை துயரத்தில் ஆழ்த்துகிறது.

