/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பரப்பலாறு அணை நீர் நேரடியாக இல்லாது பாழாகும் பாப்பான்குளம்
/
பரப்பலாறு அணை நீர் நேரடியாக இல்லாது பாழாகும் பாப்பான்குளம்
பரப்பலாறு அணை நீர் நேரடியாக இல்லாது பாழாகும் பாப்பான்குளம்
பரப்பலாறு அணை நீர் நேரடியாக இல்லாது பாழாகும் பாப்பான்குளம்
ADDED : ஜூலை 26, 2024 12:27 AM

ஒட்டன்சத்திரம் : பரப்பலாறு அணை தண்ணீர் கால்வாய் மூலம் பாப்பான் குளத்திற்கு நேரிடையாக கிடைக்காமல் உள்ளதால் குளம் வறண்டு விவசாயமும் பாழ்பட்டு வருகிறது .
ஒட்டன்சத்திரம் ஒன்றியம் காவேரியம்மாபட்டி ஊராட்சியில் பாப்பான் குளம் உள்ளது. 60 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவு கொண்ட இந்த குளத்தை நம்பி நுாற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. பல கிணறுகளுக்கு குளம் நிரம்பும் போதுதான் நீர்வரத்து ஏற்படுகிறது. விருப்பாச்சி பெருமாள் குளம் நிரம்பி மறுகால் செல்லும் நீர்தான் இக்குளத்திற்கு தண்ணீரைக் கொண்டு வந்து சேர்க்கிறது. பெருமாள் குளத்தில் மறுகால் செல்லும் நீர் ஓட்டக்குளம் சென்று அது நிரம்பி பாப்பான்குளத்தை அடையும். பெருமாள் குளம் நிரம்பவில்லை என்றால் குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்காது பெருமாள் குளத்தில் இருந்து மறுகால் செல்லும் தண்ணீர் ஐந்து கிலோ மீட்டர் பயணித்து இந்த குளத்திற்கு வந்து சேர வேண்டி உள்ளது. நீர் வரத்து கால்வாய்களில் ஆங்காங்கே புல் பூண்டுகள், சீமை கருவேல மரங்கள் முளைத்து ஆக்கிரமித்துள்ளது. இதனாலும் பெருமாள் குளம் தண்ணீர் மறுகால் சென்று குளத்தை அடைவதற்கு பல நாட்கள் ஆகிறது.
இப்பகுதி விவசாயிகள் ஆண்டுக்கு ஒரு முறை நீ வழி பாதையை சரி செய்வது வழக்கம். நீர்வழிப் பாதையின் இரண்டு கரைகளையும் சிமென்டால் கட்டினால் தண்ணீர் வீணாகாமல் விரைவில் குளத்தை அடையும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பரப்பலாறு அணையில் இருந்து கால்வாய் மூலம் இந்த குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணைநீரை கொண்டு வாங்க
பழனிமுத்து, விவசாயி: குளம் நிரம்பினால் ஒன்றரை ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. விவசாயமும் செழித்து ஓங்கும். பரப்பலாறு அணை தண்ணீர் பெருமாள் குளம் வந்து அது நிரம்பி மறுநாள் செல்லும்போதுதான் குளத்திற்கு நீர் கிடைக்கிறது. பல ஆண்டுகள் பெருமாள் குளம் நிரம்புவதே இல்லை. அந்தக் காலங்களில் இந்த குளம் வறண்டே காணப்படும். அணையில் இருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
வரத்து கால்வாயை சீரமையுங்க
ஆர்.பழனிச்சாமி, விவசாயி: பெருமாள்குளத்தில் இருந்து ஒட்டக்குளம், பாப்பான்குளம் வரும் நீர் வழி பாதையில் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றை அகற்றி கரையை பலப்படுத்தி தர வேண்டும். தண்ணீர் வீணாகாமல் இருக்க கரை பகுதிகளை சிமென்டால் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் இல்லாமல் குளம் தற்போது வறண்டு காணப்படுகிறது. குளத்திற்கு நீர்வரத்தை கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளக்கரையை பலப்படுத்துங்க
எம்.வேலுச்சாமி, விவசாயி: குளத்தில் உள்ள செடிகளை அகற்றி குளக்கரைகளை பலப்படுத்த வேண்டும். குளத்தில் இருந்து நீர் வெளியேறும் பகுதியில் உள்ள செடிகளையும் அகற்ற வேண்டும். பரப்பலாறு அணை தண்ணீரை தனி வாய்க்கால் மூலம் இங்கு கொண்டு வந்தால் இப்பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வேளாண் தொழில் சிறந்து விளங்கும்.