/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் டூ -சென்னை அரசு பஸ் சேவை நிறுத்தத்தால் பயணிகள் அவதி
/
நத்தம் டூ -சென்னை அரசு பஸ் சேவை நிறுத்தத்தால் பயணிகள் அவதி
நத்தம் டூ -சென்னை அரசு பஸ் சேவை நிறுத்தத்தால் பயணிகள் அவதி
நத்தம் டூ -சென்னை அரசு பஸ் சேவை நிறுத்தத்தால் பயணிகள் அவதி
ADDED : மே 02, 2024 06:14 AM

நத்தம்: நத்தத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைகின்றனர். மீண்டும் சென்னைக்கு அரசு பஸ் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நத்தம் பஸ் ஸ்டாண்டிலிருந்து சென்னைக்கு தினம் இரவு 8:00 மணிக்கு நத்தம் அரசு போக்குவரத்து பணிமனை மூலம் 2007 முதல் அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் கொட்டாம்பட்டி, திருச்சி வழியாக சென்னை சென்று வந்தது. இதையடுத்து நத்தம் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து இச்சேவை மாற்றப்பட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் பஸ் இயக்கப்பட்டு வந்தது. அதன்பின் நத்தம் மதுரை நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கியது. கொரோனா முடக்கத்திற்கு பின் திடீரென இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின் நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்து போக்குவரத்து தொடங்கிய பின்னும் தற்போது வரை இந்த சேவை தொடங்கப்படவில்லை. இதனால் தொடர் விடுமுறை நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் மட்டும் நத்தத்திலிருந்து சென்னைக்கு பஸ் இயக்கப்படுகிறது.
அரசு பஸ்சில் சென்னை செல்ல கட்டணம் ரூ. 430 மட்டுமே தற்போது அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து தனியார் பஸ்கள் நத்தத்திலிருந்து சென்னை செல்ல ரூ.900,ரூ.1500 வரை கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். விசேஷ தினங்களில் தனியார் பஸ் நிறுவனங்கள் அடாவடியாக ரூ.2000 வரை பயணிகளிடம் பஸ் கட்டணங்களை வசூலிக்கின்றனர். இதனால் சென்னை பயணிக்கும் பொதுமக்கள் பாதிக்கின்றனர். இதை தவிர்க்க மீண்டும் நத்தத்திலிருந்து சென்னைக்கு அரசு பஸ் சேவையை தொடங்கவும், தனியார் பஸ்களின் அடாவடியான வசூல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவை மீண்டும் பஸ்
பாண்டி, தலைவர், நத்தம் கட்டட பொறியாளர்கள் சங்கம், நத்தம்: 10 ஆண்டுகளுக்கு மேலாக நத்தம் சென்னை அரசு பஸ் சேவை இருந்தது. இதனை வர்த்தகர்கள்,பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தினர். சில ஆண்டுகளாக இச்சேவை நிறுத்தப்பட்ட தால் மதுரை, திண்டுக்கல் சென்று சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் தேவையற்ற அலைச்சல், செலவுகள் ஏற்படுகிறது. தற்போது நத்தம் துவரங்குறிச்சி நான்கு வழிசாலை பணிகளும் முடிந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காகவும் வியாபார வளர்ச்சிக்காகவும் நத்தத்திலிருந்து தலைநகருக்கு அரசு பஸ் சேவையை தொடங்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
எஸ்.எம்.கே.சேக் ஒலி, நத்தம் வர்த்தகர் சங்கத் தலைவர், நத்தம்: தனியார் பஸ்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள் அரசு பஸ்சை விட மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கின்றனர். தனியார் பஸ்களில் கட்டணங்களை ஒழுங்குபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை செல்ல பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் போது அரசு பஸ்களை காட்டிலும் பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்து மக்கள் ஏமாற்றுகின்றனர். இதன் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணிகள் தயக்கம்
எஸ்.மணிவண்ணன், ம.தி.மு.க.,மாவட்ட மாணவரணி செயலாளர், கோபால்பட்டி: தொடர் விடுமுறை தினங்கள் சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் அரசு போக்குவரத்து சேவை உள்ளது. எல்லா நாட்களில் செயல்படும் என்ற நிரந்தரம் இல்லாத நிலையில் உள்ளதால் பயணிகள் இதை நம்பி பயணிக்க தயங்குகின்றனர். தற்போது நத்தம் தொழில் வளர்ச்சி மிக்க நகரமாக வளர்ந்து வருவதால் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து தினசரி போக்குவரத்து சேவையை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

