/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தனித்தீவு போல் வாழும் ஜி.எஸ்.நகர் குடியிருப்போர்
/
தனித்தீவு போல் வாழும் ஜி.எஸ்.நகர் குடியிருப்போர்
ADDED : மார் 05, 2025 06:30 AM
திண்டுக்கல்: துார்வாரப்படாத சாக்கடை, விளக்குகள் இல்லாதததால் அனுதினமும் அச்சம் என பல்வேறு பிரச்னைகளோடு தனித்தீவில் வாழ்வது போல் வாழ்ந்து வருகின்றனர் திண்டுக்கல் ஜி.எஸ்., நகர் குடியிருப்பு வாசிகள்.
திண்டுக்கல் - பழைய கரூர் ரோட்டில் உள்ள ஜி.எஸ். நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கண்ணன், செயலாளர் சிவலிங்கம், பொருளாளர் கணேசன், உறுப்பினர்கள் விஜய், குமார் கூறியதாவது : புறநகர் பகுதியில் உள்ள எங்கள் குடியிருப்பு பகுதிகளை எவரும் கண்டு கொள்வதில்லை.
மழை காலங்களில் வீடுகளுக்கு இடையே உள்ள காலியிடங்களில் மழைநீர், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் உள்ள இடைவெளி ஒரு தீவில் இருந்து இன்னொரு தீவிற்கு செல்வது போல் உள்ளது. காலியிடங்களில் தேங்கி நிற்கும் நீரால் கொசு உற்பத்தியாவதோடு நோய் தொற்று அபாயம் உள்ளது. 10 தெருக்கள் உள்ள எங்கள் குடியிருப்பு பகுதியில் எந்த ஒரு தெருவிலும் ரோடுகள் சரியில்லை. மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. மழைகாலங்களில் பள்ளங்களில் நீர் தேங்கி உள்ளது. குடியிருப்பையொட்டிய பின்பகுதியில் ஓடும் சாக்கடை ஆங்காங்கே உடைந்து குடியிருப்புக்குள் கழிவுநீர் வந்து விடுகிறது. இதை துார்வாரினால் கழிவுநீர் வருவது தவிர்க்கப்படும். பலமுறை கோரிக்கை வைத்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை.
பிரதான ரோட்டையொட்டி குடியிருப்பு இருந்தும் ரோட்டில் ஒரு விளக்கு கூட இல்லை. இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர்.
மழைகாலம் வந்தாலே குடியிருப்பு பகுதியே ஒரு தனித்தீவு போல் மாறி விடுகிறது. கொசுமருந்துகள் அடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லாத சூழல் தான் நிலவுகிறது. குப்பை தொட்டிகள் எங்குமே இல்லை. நாங்களே கொண்டு சென்று வேறு இடத்தில் கொட்டி வரும் நிலை உள்ளது என்றனர்.