ADDED : ஆக 10, 2026 09:33 PM
திண்டுக்கல், ஆக.11
மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு ‘அல்பெண்டசோல்’ குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் துர்கா துவக்கி வைத்தார்.
அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் 1 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 5 லட்சத்து 6 ஆயிரத்து 920 மாணவ, மாணவிகள், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 835 பெண்கள் என மொத்தம் 6 லட்சத்து 79 ஆயிரத்து 755 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இம்முகாம்களில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் ஆக.,17ல் நடக்க உள்ளது.
முன்னதாக கலெக்டர் தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றனர். மாநகராட்சி மேயர் இளமதி, மாவட்ட துணை இயக்குநர் (பிறப்பு இறப்பு) சாந்தினி, மாவட்ட சுகாதார அலுவலர் செல்வக்குமார், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் உமா மகேஸ்வரி, முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார், மாநகர நகர் நல அலுவலர் முருகானந்த், பள்ளி தாளாளர் அந்தோணிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
