/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
/
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED : மே 02, 2024 06:18 AM
திண்டுக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோயமுத்துார், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு கரூர் பல்லடம் உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி செய்தனர். இதேபோல திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில் கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை,அபிஷேகம் நடந்தது. தேங்காய்,வெள்ளைப் பூசணியில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.
ரெட்டியார்சத்திரம்:ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில்,கிழக்கு நோக்கிய காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. மஞ்சள் பட்டு, விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஏராளமான வெளிமாவட்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து காலபைரவர், மூலவரை தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில், வாகன பாதுகாப்பு, சுகாதார வசதிகள் செய்யப்பட்டது.
கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் மூலவர் செங்கமலவல்லி சமேத பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அனுகிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.
செம்பட்டி : கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
-- ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்தனர். அண்ணாமலையார் தீப ஆராதனை குழு சார்பில் 200க்கு மேற்பட்ட பக்தர்களால் பல்வேறு நதிகளிலிருந்து புனித கலசங்களால் கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சுவாமி தரிசனம் செய்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாலு, கவுன்சிலர் ரமேஷ் பங்கேற்றனர்.

