/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் குமுளி ரோடை 4 வழிச்சாலையாக மாற்றலாமே
/
திண்டுக்கல் குமுளி ரோடை 4 வழிச்சாலையாக மாற்றலாமே
UPDATED : ஜூன் 09, 2024 07:06 AM
ADDED : ஜூன் 09, 2024 05:18 AM

திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு, தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, சின்கோயில், உத்தமபாளையம், கம்பம், வழியாக குமுளிக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழி சாலை அமைக்க திட்டமிடப்பட்டு நிலமும் கையகப்படுத்தப் பட்டது. 138 கி.மீ., உள்ள ரோட்டில் வாகன போக்குவரத்து குறைவாக இருப்பதாக கூறி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூன்று வழிச்சாலையாக மட்டுமே உருவாக்கியது.
டெண்டர் எடுத்த நிறுவனத்தால் திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு வரை உள்ள 35 கி.மீட்டர் துாரம் ரோடு அமைவதற்கே நான்கு ஆண்டுகள் ஆயின. அதன் பின் பெரியகுளம், தேனி, வீரபாண்டி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் புறவழிச்சாலை அமைவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்புதான் மூன்று வழிச்சாலை பணிகள் முடிந்தன. மூன்று வழி சாலை குமுளி வரை அமைப்பதற்கு 10 ஆண்டுகளை கடந்து விட்டது.
தற்போது சபரிமலை ஐயப்பன் கோயில், கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா மையத்திற்கு ஆண்டுதோறும் மக்கள் சென்ற வண்ணம் இருப்பதால் இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகமாகிவிட்டது. நாள்தோறும் இந்த ரோட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களும், வார இறுதி நாட்களில் இதன் எண்ணிக்கை மேலும் உயர்கின்றன. இதனால் அதிவேகமாக செல்லக்கூடிய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகின்றன. ஒன்றன்பின் ஒன்றாகவே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மேலும் கிராம ரோடுகள் சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. இந்த ரோடு நான்கு வழிச்சாலையாக மாறினால் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்தை பொதுமக்கள் அடைய முடியும். போக்குவரத்து நெரிசலும் இருக்காது. விபத்துக்களும் குறையும்.