/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வளர்பிறை சஷ்டி: முருகன் கோயில்களில் வழிபாடு
/
வளர்பிறை சஷ்டி: முருகன் கோயில்களில் வழிபாடு
ADDED : செப் 10, 2024 05:49 AM

திண்டுக்கல்: வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு,அலங்காரம்,அபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுள்ள ஆறுமுகப் பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்துக்கு பின், தீபாராதணை நடந்தது. முன்னதாக பால தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் நடந்தது.
கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி கோயில்களிலும் வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
*ராமலிங்கம்பட்டியில் பாதாள செம்பு முருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு மூலவர், ஜலகண்டேஸ்வரர், விநாயகர், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
கோயில் நுழைவாயிலில் உள்ள 18 அடி உயர கருப்பணசாமிக்கு, 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது.
விசேஷ மலர் அலங்காரத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தது.
*சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் பால், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. மூலவர், உற்சவருக்கு விசேஷ மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடந்தது.
* செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில் தருமத்துப்பட்டி ராமலிங்க சுவாமி கோயிலில், சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
*நத்தம் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருக பெருமானுக்கு பால்,பழம்,பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.
அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.