/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிவு நீர் தேக்கம் ; மழை வந்தால் வீடுகளுக்குள் புகும் அவலம் விடிவுக்காக காத்திருக்கும் திண்டுக்கல் 34வது வார்டு மக்கள்
/
கழிவு நீர் தேக்கம் ; மழை வந்தால் வீடுகளுக்குள் புகும் அவலம் விடிவுக்காக காத்திருக்கும் திண்டுக்கல் 34வது வார்டு மக்கள்
கழிவு நீர் தேக்கம் ; மழை வந்தால் வீடுகளுக்குள் புகும் அவலம் விடிவுக்காக காத்திருக்கும் திண்டுக்கல் 34வது வார்டு மக்கள்
கழிவு நீர் தேக்கம் ; மழை வந்தால் வீடுகளுக்குள் புகும் அவலம் விடிவுக்காக காத்திருக்கும் திண்டுக்கல் 34வது வார்டு மக்கள்
ADDED : மே 19, 2024 06:48 AM

திண்டுக்கல், : சேதமான ரோடுகள்,எங்கு பார்த்தாலும் சுற்றித்திரியும் கால்நடைகள்,இரவு மட்டுமில்லாமல் பகல் நேரத்திலும் கடித்து குதறும் கொசுக்கள்,மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்,ஆண்டுக்கணக்கில் குளம்போல் தேங்கிய கழிவுநீர்,இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி,புகாரளித்தாலும் கண்டு கொள்ளாத அதிகாரிகள் என ஏராளமான பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 34வது வார்டு மக்கள்.
குள்ளனம்பட்டி,துர்க்கை அம்மன் கோயில் தெரு,சாஸ்திரிநகர், வினோபாஜிநகர், எஸ்.ஆர்.எம்.எஸ். காலனி, கிழக்கு மரியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் எண்ணிலடங்கா பிரச்னைகளில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். இங்குள்ள சேதமான ரோடுகளால் மக்கள் நடமாட முடியாமல் தடுமாறி விழுகின்றனர். டூவீலர்களிலும் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் வேறு பாதையை மாற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் சுற்றித்திரியும் கால்நடைகளால் மக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். திடிரென இவைகள் ரோட்டில் செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன . மாநகராட்சி அதிகாரிகள் எப்போதாவது கால்நடைகளை பிடிக்கின்றனர். மீண்டும் அவைகள் ஹாயாக ரோட்டில் சுற்றுகின்றன. இரவு மட்டுமில்லாமல் பகல் நேரத்திலும் கடிக்கும் கொசுக்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் நடமாட முடியாமல் தவிக்கின்றனர். கொசு வலைகளை பயன்படுத்தினாலும் அதனிடமிருந்து மக்கள் தப்பிக்க முடியாத நிலை உள்ளது. கொசு மருத்து அடிக்க வரும் ஊழியர்களும் ஒரு சில இடங்களில் கடமைக்கு அடித்து விட்டு செல்கின்றனர். கொசு உற்பத்தி கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எந்நேரமும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தெரு நாய்கள் ரோட்டோரங்களில் சுற்றுகின்றன. சில நேரங்களில் அவைகளுக்குள் ஏற்படும் சண்டையில் மக்களை கடிக்கிறது. இதைத்தடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது. துர்க்கை அம்மன் கோயில் தெருவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் தேங்கி அப்படியே கிடக்கிறது. கழிவுநீரை வெளியேற்ற மின் மோட்டார் பயன்பாட்டில் உள்ளது. அதுவும் அவ்வப்போது பழுதாக கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. மழை நேரங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. எத்தனையோ அதிகாரிகளிடம் மனு கொடுத்த போதிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு வழியில்லை. என்ன செய்வது என தெரியாமல் மக்கள் கண் விழி பிதுங்கி கண்ணீர் வடிக்கின்றனர்.
தீர்வு வேண்டும்
ரூபன்,பிட்னஸ் மாஸ்டர்,துர்க்கை அம்மன் கோயில் தெரு: துர்க்கை அம்மன் கோயில் தெருவில் பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதனால் பலரும் எங்கள் பகுதியில் பாதிக்கப்படுகின்றனர். இந்த கழிவுநீரில் கொசு உற்பத்தி ஜோராக நடக்கிறது. கோடை காலத்திலும் கழிவுநீர் தேங்கி எங்களை கஷ்டப்படுத்துகிறது. இதன்மீது அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக தீர்வு இல்லாமல் நிரந்தர தீர்வு வேண்டும்.
கொசு மருந்து அடிக்க வேண்டும்
ஈஸ்வரி, குடும்பத்தலைவி ,குள்ளனம்பட்டி: எங்கு பார்த்தாலும் கொசுக்களின் கூடாரமாக சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. துார்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மாதக்கணக்கில் கழிவுநீர் தேங்கி உள்ளது. பல முறை புகாரளித்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை. மழை நேரங்களில் சொல்லவே வேண்டாம் .அந்த அளவிற்கு ரோடு முழுவதும் கழிவுநீர் குளம்போல் ஓடுகிறது. இதைக்கட்டுப்படுத்த வேண்டும். கொசுவை கட்டுப்படுத்த வாரம் இருமுறை கொசு மருந்து அடிக்க வேண்டும்.
நாய்களை கட்டுப்படுத்துங்க
திவ்யநாதன்,துர்க்கை அம்மன் கோயில் தெரு: வார்டை சுற்றிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமலிருப்பதால் தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. ரோட்டில் குழந்தைகள்,வயதானவர்கள் நடமாடவே முடியவில்லை. அந்த அளவிற்கு தெரு நாய்கள் மக்களை அச்சுறுத்துகிறது. இதைக்கட்டுப்படுத்த வேண்டும்.
கோரிக்கை வைத்துள்ளேன்
பாஸ்கரன்,கவுன்சிலர்(அ.தி.மு.க.,): நானும் என் வார்டில் உள்ள பிரச்னைகள் அனைத்தையும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டேன். சரி செய்கிறோம் என கூறுகின்றனர். ஆனால் எந்த வேலையும் நடந்த பாடில்லை. ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது.
இதனால் எந்த வாகனங்களும் தெருக்களில் செல்ல முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் சேதமான ரோடுகள் குறித்தும் கோரிக்கை வைத்துள்ளேன். எல்லா பிரச்னைகளும் விரைவில் சரி செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

