/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில்களில் ஆடிப்பெருக்கு வழிபாடு
/
கோயில்களில் ஆடிப்பெருக்கு வழிபாடு
ADDED : ஆக 04, 2024 06:22 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் ஆடி பெருக்கை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் வெக்காளியம்மன் கோயிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் ஆர்.எம். காலனி வெக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு உற்ஸவ விழா நடபெறுவது வழக்கம். அதன்படி 31-ம் ஆண்டு உற்ஸவ விழா நடந்தது. ஸ்ரீவெக்காளி அம்மன் பரிவாரங்களான வெற்றி விநாயகர், பால நாகம்மாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்ய தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயில் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பக்தர்கள் குழந்தைகளை துாக்கியப்படி , அலகு குத்தி , அக்னி சட்டி ஏந்திய பூக்குழி இறங்கினர்.
வடமதுரை :வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம் செய்ய சிறப்பு வழிபாடு நடந்தது. மாலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் நான்கு ரத வீதிகள் வழியே நகர் வலம் வந்தார். வடமதுரை மகா காளியம்மன், மாரியம்மன், அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயில், அனைத்து பகுதிகளிலும் இருக்கும் குல தெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஒட்டன்சத்திரம் : காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. கே.அத்திக்கோம்பை காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு பால் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தங்கச்சியம்மாபட்டி கரை மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் , பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள்,விருப்பாச்சி தலையூற்று நல்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டனர். குழந்தை வேலப்பர் கோயிலில் வேலப்பருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. எஸ்.அத்திக்கோம்பை உச்சிமாகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய பூஜைகள் நடந்தது.
ஆத்துார்:அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் , கிடா பலியிடல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
கன்னிவாடி : தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் திருமஞ்சன அபிஷேகத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விசேஷ தீபாராதனைகள் நடந்தது.
ரெட்டியார்சத்திரம் : கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் கமலவல்லி சமேத கதிர் நரசிங்க பெருமாளுக்கு திரவிய அபிஷேகத்துடன், துளசி மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வீர ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றுதலுடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
பழநி: சண்முக நதியில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு சப்த கன்னிகள் வைத்து காது ஓலை, கருகுமணி வைத்து பக்தர்கள் பூஜை செய்தனர்.
பெரியாவுடையார் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினங்குடி, பழநி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.
பழநி நகரில் கூனகாளியம்மன் கோயிலில் 108 சங்கு அபிஷேகம், மகாலட்சுமி யாகம் ,அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்கள் தங்கள் குல தெய்வங்களை வழிபடும் பொருட்டு சண்முக நதிக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து கோயில் வழிபாடு நடத்தினர்.
- பழநி சண்முக நதியில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மெய் தவம் அடிகள் தலைமையில் சிறப்பு ஆராட்டு விழா நடைபெற்றது. சண்முக நதியில் மேள தாளங்கள் முழங்க நதியில் வேல் வைத்து மலர்கள்துாவி வழிபாடு நடந்தது. செண்டை மேளங்கள் முழங்க சண்முக நதிக்கு தீபாராதனையுடன் ஆரத்தி விழா அரோகரா கோஷத்துடன் நடந்தது.
கொடைக்கானல்: கொடைக்கானல் , தாண்டிக்குடி மலைப்பகுதி கோயில்களில் ஆடிபெருக்கு வழிபாடு நடந்தது. இங்குள்ள குறிஞ்சியாண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர், ஆனந்தகிரி பெரிய மாரியம்மன், வில்பட்டி வெற்றி வேலப்பர், தாண்டிக்குடி பாலமுருகன், கானல்காடு பூதநாச்சியம்மன், பண்ணைக்காடு மயான காளியம்மன், குல தெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானமும் நடந்தது.