/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
12ம் நுாற்றாண்டு வீரர் நடுகல் கண்டெடுப்பு
/
12ம் நுாற்றாண்டு வீரர் நடுகல் கண்டெடுப்பு
ADDED : ஏப் 25, 2025 01:25 AM

தாடிக்கொம்பு:திண்டுக்கல் மாவட்டம் அழகுபட்டி மாலைகோவில்பட்டி ஓடை அருகே, வீரர் ஒருவருடன் பெண் இருந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர் ந.தி.விஸ்வநாத தாஸ், மாணவர் ரத்தினமுரளிதர், ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன், பெருமாள்சாமி ஆகியோர் கூறியதாவது:
வீரரின் வலது கையில் மார்பின் குறுக்கே நீட்டிய நிலையில் வாள் உள்ளது. இரு கைகளிலும் கங்கணம், தோளில் லாகு வளையம், தலையில் கரண்ட மகுடம் உள்ளது. கழுத்தின் பின்புறம் உத்திரியம் பறப்பது போலும், இடையில் கச்சையும், அதில் இடைகச்சையாணி வேலைப்பாட்டுடன் தொங்குவதும், கால்களில் தண்டையும் உள்ளது. இது, வீரர் போரில் இறந்துவிட்டதை குறிக்கிறது.
பெண்ணின் முகம் வீரரை பார்த்தபடியும், கொண்டை சரிந்தும், காதில் வளையம் மார்பு கச்சையும் அணைத்தப்படி, நெஞ்சில் ஆரம், இடது கை மார்பிற்கு கீழ் குடுவை, வலது கையில் வளரி போன்ற ஆயுதம் உள்ளதால், இவ்வீரரின் மனைவியும், போர் வீராங்கனையாக இருந்திருக்கலாம்.
குடுவை உள்ளதால் வீரர் இறந்ததும் அவருடன் உடன்கட்டை ஏறியிருப்பார். இந்த நடுகல்லின் காலம் 12-ம் நுாற்றாண்டு ஆகும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

