/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேவாங்குகளை பாதுகாக்க 20 லட்சம் மரக்கன்றுகள்
/
தேவாங்குகளை பாதுகாக்க 20 லட்சம் மரக்கன்றுகள்
ADDED : மார் 18, 2024 07:03 AM

அய்யலுார் மலைப் பகுதிகளில் வாழும் அரிய வகை பாலுாட்டி இனமான தேவாங்குகளை பாதுகாக்கும் நோக்கில் கீழ் சீட்ஸ் அறக்கட்டளை சார்பில் 20 லட்சம் மரங்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு பணிகளை துவங்கியுள்ளனர்.
வடமதுரை அய்யலுார் மலைப்பகுதிகளில் காணப்படும் தேவாங்கு இனத்தை காப்பதற்காக சீட்ஸ் அறக்கட்டளை தேவாங்குகள் பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்கியது. இதற்காக மலை சார்ந்த பகுதியினருக்கு பல்வேறு உதவி திட்டங்களை செயல்படுத்தி தேவாங்குகளை பாதுகாக்க முயற்சி எடுக்கிறது. இந்த பகுதி கிராமங்களை சேர்ந்த என பள்ளி, கல்லுாரி மாணவர்களை தேவாங்கு பாதுகாப்பு துாதுவர்களாக நியமித்து அவர்களது கல்விக்கு உதவிகளை செய்கிறது. தற்போது அய்யலுார் வனப்பகுதி சார்ந்த பகுதியில் குறைந்து போன மரங்களின் எண்ணிக்கையை மீட்டெடுக்க சீட்ஸ் அறக்கட்டளையின் அய்யலுார் சுற்றுச்சூழல் கல்வி மையம்,அய்யனார் அருவி என இரு இடங்களில் நர்சரிகள் அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கின்றனர். நாவல், கொய்யா, மகாகனி, தேங்கு, புங்கன், எலுமிச்சை, முருங்கை, பலா, கொன்னை, வேம்பு, அகத்தி, கரும்பொரசு, பாப்பாளி, நெல்லி, பூவரசு, இலவசம் பஞ்சு, சித்தக்கத்தி, பாலை, புளி, சீத்தா, கொடுங்காபுளி, வெப்பாலை போன்ற மரங்கன்றுகள் வளர்கின்றன. இந்த மரங்கன்றுகளை வளர்ப்பதற்காக சுக்காவளி, கிணத்துபட்டி, செங்குளத்துபட்டி, கோம்பை, கணவாய்பட்டி, பஞ்சம்தாங்கி, ப.புதுார், குடகிபட்டி, மாமரத்துபட்டி, செங்குறிச்சி, வலசு, மந்தைகுளத்துபட்டி, குரும்பபட்டி, ஆலாம்பட்டி, புத்துார், பூசாரிபட்டி போன்ற மலைச்சார்ந்த பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளை வரவழைத்து பயிற்சி முகாம் மூலம் மரங்களை வளர்த்து அதிக மகசூல், லாபம் பெற செய்ய வேண்டிய வழிமுறைகள், ஆலோசனைகள் வழங்குகின்றனர்.
நீர் இல்லாமலும் வளரும்
பி.முத்துச்சாமி,நிறுவனர்,சீட்ஸ் அறக்கட்டளை, அய்யலுார்: தேவாங்கு இனத்தை பாதுகாக்கவும், மழை வளம் பெருகுவதற்கும் மரங்கள் அவசியம். இதற்காக இப்பகுதி மலைகள், மலை சார்ந்த விளைநிலங்களில் 20 லட்சம் மரங்களை வளர்க்க இலக்கு நிர்ணயம் செய்து பணிபுரிகிறோம். ஏற்கனவே ஊரான் கரட்டில் உள்ளூர் மக்கள் பங்களிப்புடன் இப்பணியை செய்து எதிர்பார்த்த வகையில் மரங்கள் தற்போது வளர்க்கின்றன. தற்போது அய்யலுார், அய்யனார் அருவி பகுதிகளில் அமைக்கப்பட்ட எங்களது நர்சரிகளில் வளர்க்கப்படும்.
மரக்கன்றுகள் அனைத்துமே இப்பகுதியின் மண் வளம், வறட்சியை தாங்கி வளரக்கூடியவை.
இதற்காக நர்சரியில் மரக்கன்றாக இருக்கும்போதே ரசாயண உரம், பூச்சி கொல்லிகளை பயன்படுத்தாமலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டே நீர் பாய்ச்சி வளர்க்கின்றோம். இவ்வாறு செய்வதன் மூலம் நடவு செய்த பின் அதிக நாட்கள் நீர் கிடைக்காவிடினும் உயிர் பிழைத்து வளரும் தன்மையை கொண்டிருக்கும்.
மழை வளம் அதிகரிக்கும்
வி.ஆர்.ஐயப்பன், பயிற்சி இயக்குனர், சீட்ஸ் அறக்கட்டளை,அய்யலுார்: ஒரு நாட்டின் வளம், காடுகளின் தன்மை பரப்பளவு ஆகியவற்றை கொண்டு நிர்ணயிக்கப்படும். வேளாண்மையும்,வன வளமும் நாட்டிற்கு இருகண்கள். விவசாய சார்ந்த மக்களின் வாழ்க்தை தரம் மேம்படவும்,நில வளங்களை பாதுகாக்கவும், நிலையான நீடித்த வேளாண்மையை உறுதிப்படுத்த வேளாண் காடுகளே சிறந்த வழிமுறை. விவசாய நிலங்களில் மரங்களுடன் வேளாண் பயிர்களை ஒரே நேரத்தில், ஒன்றன்பின் ஒன்றாகவோ, ஊடுபயிராகவோ, தனிப்பயிராகவோ, வரப்பு பயிராகவோ பயிரிடுவதே வேளாண் காடாகும். இதனுடன் கால்நடைகளையும் பராமரிக்கலாம். மரங்கள் அதிகரிக்கும்போது இப்பகுதியில் வாழும் தேவாங்குகள் பாதுகாக்கப்படும், மழை வளம் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் மேம்படும்.

