ADDED : ஜூலை 17, 2026 11:36 PM

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்ச்சின் ரோப் மாற்றும் பணிகள் முடிந்து நேற்று முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
பழநி முருகன் கோயிலுக்கு சென்றுவர வின்ச், ரோப் கார், படிப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் 3 வின்ச்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் மூன்றாவது வின்சில் 36 பேர் பயணிக்க முடியும்.
இந்த வின்ச்சில் 450 மீ., ரோப் பயன்படுத்தப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட இடைவெளியில் இந்த ரோப் மாற்றப்படுகிறது.
ஜூலை 13 முதல் மூன்றாவது வின்சின் ரோப் மாற்றும் பணி நடந்தது. பணி முடிந்த நிலையில் நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் நடந்தது. நேற்று மதியம் 2:00 மணிக்கு பூஜைகள் செய்யப்பட்டு மூன்றாவது வின்ச் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
ஜூலை 20 முதல் ரோப் கார் சேவை நிறுத்தம் பழநி முருகன் கோயிலுக்கு ரோப்கார் மூலம் மூன்று நிமிடத்தில் செல்ல முடியும். ரோப்கார் பராமரிப்பு பணிகள் ஜூலை 20ல் துவங்க உள்ளது. இதற்காக ரோப்கார் வடக்கயிற்றில் இருந்து பெட்டிகள் அகற்றப்பட்டு பழுதடைந்த பாகங்கள், வடக்கயிறு, தேய்மானமான பொருட்கள், சாப்ட்கள் உள்ளிட்டவை புதிதாக மாற்றப்பட உள்ளன.
தொடர்ந்து 45 நாட்கள் இப்பணிகள் நடக்க உள்ளதால் அதுவரை ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வின்ச், படிப்பாதை, யானைப்பாதையை பயன்படுத்தலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
