ADDED : ஜூலை 17, 2026 11:40 PM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் தண்ணீர் குடிக்க சென்ற ஆண் யானை தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி பலியானது.
ஒட்டன்சத்திரம் வனச்சரக பகுதியில் மான், சிறுத்தை, யானை, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன.
இவை தண்ணீர் குடிக்க அவ்வப்போது பரப்பலாறு அணைப்பகுதிக்கு வந்து செல்கின்றன.
இரண்டு நாட்களுக்கு முன் அணைப்பகுதியில் தண்ணீர் குடிக்க ஆண் யானை வந்தது. அங்கு தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியில் உடல் உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. இறந்த யானைக்கு 15 முதல் 20 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மதுரை வனத்துறை டாக்டர் கலைவாணன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் உடற்கூராய்வு செய்ததும் அதே இடத்தில் யானையின் உடல் புதைக்கப்பட்டது.
மண்டல வன பாதுகாவலர் முகமது சபாப், கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் அரவிந்த் விசாரணை நடத்தினர்.
மாவட்ட உதவி வன அலுவலர் நிர்மலா, வனச்சரகர் குமரேசன், வனவர் சின்னத்துரை உடனிருந்தனர்.
