/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'மனுகொடுக்க 5 நிமிடம்... பேசுவதற்கு 2 நிமிடமா' குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்
/
'மனுகொடுக்க 5 நிமிடம்... பேசுவதற்கு 2 நிமிடமா' குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்
'மனுகொடுக்க 5 நிமிடம்... பேசுவதற்கு 2 நிமிடமா' குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்
'மனுகொடுக்க 5 நிமிடம்... பேசுவதற்கு 2 நிமிடமா' குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்
ADDED : அக் 19, 2024 05:21 AM

திண்டுக்கல் : ''மனு கொடுக்க 5 நிமிடம் பேசுவதற்கு 2 நிமிடமா''என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் காந்திநாதன், இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை ராஜா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்கள் காயத்ரி, நடராஜன், செயற்பொறியாளர்கள் பாலமுருகன், ராஜா, தாட்கோ மேலாளர் முகைதீன் அப்துல்காதர், திட்ட அலுவலர் அண்ணாத்துரை, கலெக்டர் நேர்முக உதவியாளர் முருகன், வேளாண் துணை இயக்குநர் அமலா முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் விவாதம்
தங்கவேல், குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடக்கிறது. தங்கம்மாபட்டி தங்கம்மா குளத்தை துார்வார பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
கலெக்டர்: சார்பதிவாளர்கள் அலுவலகத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நல்லுசாமி,ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சின்னக்குளம் கண்மாய்களில் மதகுகள் சுத்தப்படுத்தாமல் சேரும், சகதியுமாக உள்ளது. இதை சுத்தப்படுத்த வேண்டும்.
கலெக்டர்: மனு கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாரிமுத்து,சாணார்பட்டி: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனுகொடுக்க 5 நிமிடம்,பேசுவதற்கு 2 நிமிடம் ஒதுக்கிறீர்கள். இந்த நேரத்தில் எப்படி குறைகளை தெரிவிக்க முடியும். தற்போது நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. புத்தக திருவிழா மாவட்ட நிர்வாகம் சார்பில் நடக்கிறது. ஆனால் அங்கே எந்த வசதிகளும் இல்லாததால் கூட்டமே வருவதில்லை.
கலெக்டர்: புத்தக திருவிழாவை பற்றி இங்கே பேசவேண்டாம். விவசாயிகளுக்கு தேவையான அதிக புத்தகங்கள் அங்கே இருக்கிறது. தேவைப்படுவோர் வாங்கி கொள்ளலாம்.
ராஜேந்திரன், நிலக்கோட்டை: விளாம்பட்டி பகுதி நெல் கொள்முதல் நிலையங்கள் மழை நேரங்களில் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.
கலெக்டர்: உடனே ஆய்வு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
ரங்கமணி,குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை சுற்றுப்பகுதிகளில் பகல்,இரவு பாராமல் மணல் கொள்ளைகள் நடக்கிறது. அதிகாரிகள் எதை பற்றியும் கவனிக்காமல் மவுனமாக உள்ளனர்.
கலெக்டர்: மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரக வளர்ச்சி உதவித் திட்ட அலுவலர்: 100நாள் வேலை திட்டத்தின் மூலம் விவசாய வேலைகளான மண்,கல் வரப்புகளை கட்டித்தரப்படும். களை எடுப்பது,நாற்று நடுவது போன்ற வேலைகள் இத்திட்டத்தில் இல்லை. தேவைப்படும் விவசாயிகள் எங்களை அணுகலாம் என்றார்.

