/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' வனப்பகுதியை ஆக்கிரமிக்கும் அந்நிய மரங்கள்
/
'கொடை' வனப்பகுதியை ஆக்கிரமிக்கும் அந்நிய மரங்கள்
ADDED : டிச 22, 2024 07:07 AM

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியை ஆக்கிரமிக்கும் அந்நிய மரங்களை அகற்றி சோலை மரங்களை நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ளது.பல்லாயிரக்கணக்கான ஏக்கரிலான வனச் சரணாலயமும் உள்ளது. இதில் சோலை மரக்காடுகள் குறைந்த அளவிலே உள்ளது. அந்நிய மரங்களான யுகாலிப்டஸ், வேட்டில், பைன் உள்ளிட்ட மரங்கள் 75 சதவீதம் வன பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இம்மரத்தின் கீழ் புல் உள்ளிட்ட இதர தாவரங்கள் வளராத நிலையில் அந்நிய மரங்களின் விதைகள் பரவி வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. கொடைக்கானல் வனச் சரணாலயத்தில் புலி, சிறுத்தை காட்டுமாடு, காட்டுப்பன்றி, மான், முயல், மயில் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவற்றின் உணவு சங்கிலி பாதிப்பிற்கு இவ்வகை அந்நிய மரங்களே காரணமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் பூம்பாறை மன்னவனுார், ஆனைமலை புலிகள் காப்பகம், கூக்கால் உள்ளிட்ட வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வன நிலங்கள் தீயில் கருகியது. இதில் அந்நிய மரங்களும் கருகின. தென்மேற்கு பருவமழை , தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையால் கருகிய நிலப்பரப்பு பசுமை பெற்றுள்ளது. தீயில் அந்நிய மரங்களின் விதைத்துாவல் பாதிக்காது தற்போது வீரியம் பெற்று ஏராளமான மரக்கன்றுகள் உருவாகி உள்ளது. ஆனால் தீயில் கருகிய மரங்களில் இருந்து அபரிவிதமாக கிளைகள் உருவாகி மீண்டும் வனப்பகுதியை ஆக்கிரமித்து உள்ளன.
காட்டு தீயால் பாதித்த வனப்பகுதியில் வனத்துறையினர் சோலை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வகை மரங்களை அகற்றி சோலை மரக்காடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் விரும்புகின்றனர். நீதிமன்ற வழிகாட்டுதல்படி கொடைக்கானல் சுற்றுச்சூழலை பாதிக்கும் மரங்களை படிப்படியாக அகற்றும் உத்தரவையும் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.