/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சத்துணவு காலியிடங்களை நிரப்பாததால்... கூடுதல் பணி: தடுமாற்றம் காணும் மதிய உணவு திட்டம்
/
சத்துணவு காலியிடங்களை நிரப்பாததால்... கூடுதல் பணி: தடுமாற்றம் காணும் மதிய உணவு திட்டம்
சத்துணவு காலியிடங்களை நிரப்பாததால்... கூடுதல் பணி: தடுமாற்றம் காணும் மதிய உணவு திட்டம்
சத்துணவு காலியிடங்களை நிரப்பாததால்... கூடுதல் பணி: தடுமாற்றம் காணும் மதிய உணவு திட்டம்
UPDATED : பிப் 25, 2026 07:28 AM
ADDED : பிப் 25, 2026 07:26 AM

நத்தம்:திண்டுக்கல் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் 975 சத்துணவு அமைப்பாளர்கள், 219
சமையலர்கள், 770 உதவியாளர்கள் காலி பணியிடங்களால் கூடுதல் பணிச்சுமையில் பணியாளர்கள் தவித்து வருவதால் மதிய உணவுத் திட்டமே தடுமாற்றம் காணும் நிலையில் உள்ளது.
வறுமையில் வாடும் கிராம ஏழை மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கல்வியையும் உணவையும் ஒருசேர வழங்கும் வகையில் 1955ல் அன்றைய முதல்வர் காமராஜரால் கொண்டு வரப்பட்டது மதிய உணவுத் திட்டம்.இதன்பின் இத்திட்டம் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் 1982ல் கிராமப்புறம், நகர்ப்புறம் என அனைத்துப் பகுதிகளுக்கும் சத்துணவு திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தப் பட்டது.
இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. சத்துணவு உதவியாளர்கள் அமைப்பாளர்,சமையலர், பணி நியமனத்துக்கான அறிவிப்பு 2017, 2020ல் வெளியிடப்பட்டு நேர்காணல் நடத்தி முடித்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் காலியிடங்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 1518 மையங்களில் 975 சத்துணவு அமைப்பாளர்கள், 219 சமையலர்கள், 770 உதவியாளர்கள் என 1964 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதன் காரணமாக ஒரு மையத்தை கவனித்து வந்த சத்துணவு அமைப்பாளர் நான்கு மையங்களிலும், சமையலர்கள் மூன்று மையங்களிலும் பணியாற்றும் சூழல் நிலவுகிறது. இந்த பணிச்சுமையால் ஊழியர்கள் பலர் மன ரீதியாகப் பாதிக்கப்படடுள்ளனர்.விறகு மூலம் உணவு சத்துணவு மையங்களில் தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது எரிவாயு மூலமே உணவு சமைக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் காஸ் விலை உயர்வு, காய் கறிகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அரசு வழங்கும் அரிசி, பருப்பு தவிர்த்து இதர மளிகைப் பொருட்களை பணியாளர்களே வாங்க வேண்டியுள்ளது.
இவற்றின் விலையேற்றமும் கவலை அடைய செய்துள்ளது. சத்துணவு திட்டத்தில் இரு மடங்கு செலவாவதால் ஊழியர்கள் திணறுகின்றனர். அவர்கள் மாணவர்களுக்கு தினசரி சத்துணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்க மிகவும் சிரமப்படுகின்றனர்.உணவு செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். அதுவும் வழங்க வில்லை.
![]() |
தேவையற்ற நெருக்கடி
சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர்கள் காலி பணியிடங்கள் பத்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ளது. நத்தம் தொகுதியில் மட்டும் 120 பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர்கள் காலியிடங்கள் உள்ளன. இதனால் ஒவ்வொரு அமைப்பாளரும் இரண்டு முதல் நான்கு பள்ளிகள் வரை பணியாற்றுவதால் கூடுதல் பணி சுமையில் உள்ளனர்.சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இத்திட்டம் இருந்த போதும் ஊழியர்கள் நியமனம்,
இடமாற்றம், கண்காணிப்பு, நிதி ஒதுக்கீடு போன்றவற்றை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளே
செய்கின்றனர். இது தவிர பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையிடுதல் புகார்
அனுப்புதல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
பெரும்பாலும் சத்துணவுத் துறையில் பெண் ஊழியர்களே அதிகமாக உள்ளதால் தேவையற்ற நெருக்கடிகளை சந்திக்கின்றனர். ஒரே துறையின் கீழ் சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அத்துறை ஊழியர்களிடம் நீண்ட காலமாக உள்ளது.
இரா.பிரபாகரன், மாநில
ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்
கட்சி, சாணார்பட்டி.


