/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை பெருமாள் கோயிலில் தேரோட்டம்
/
வடமதுரை பெருமாள் கோயிலில் தேரோட்டம்
ADDED : ஆக 10, 2025 02:48 AM

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயில் திருவிழா ஆக.1ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது . 13 நாள் நடக்கும் இவ்விழா ஆக.13 வரை நடக்கிறது. தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படிதாரர் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் ஆக.7 இரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் நடந்தது. இதைதொடர்ந்து விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி காலையில் கோயில் வளாகத்தில் சுதர்ஷண ஹோமம், மதுரை அழகர்மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சன்னதியில் இருந்து ஊர் பிரமுகர்கள் அழைத்து வர முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளினார்.
மாலை 4:50 மணிக்கு பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க திருத்தேரோட்டம் நடந்தது. திண்டுக்கல் ரோடு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், திருச்சி ரோடு வழியே நகரை வலம் வந்தது. பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன், செயல் அலுவலர் பத்மலதா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.