ADDED : ஜன 14, 2025 05:37 AM

பழநி: பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவிற்கான தேர் புதியதாக புனரமைக்கப்பட்டுள்ளது.
தைப்பூச தேரை புனரமைக்க கோயில் நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்ட நிலையில் தேரின் சக்கரம் , அச்சு தவிர மற்ற பாகங்கள் புதியதாக வடிவமைக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இதை சேலம் மாவட்டம் தம்மம்பட்டி சிற்பிகள், ஸ்தபதி பாலசுப்பிரமணி தலைமையில் செய்தனர்.
இலுப்பை மரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள தேரை புனரமைக்க ரூ.46 லட்சம் ஒதுக்கப்பட்டது. தற்போது தேர் புனரமைக்கப்பட்டு தயாராக உள்ள நிலையில் தைப்பூச விழாவிற்கு இத்தேரில் தேரோட்டம் நடைபெற வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இதன் வெள்ளோட்டம் ஜன.27ல் நடைபெறுகிறது. இந்தாண்டு தைப்பூச தேரோட்டம் புது தேரில்தான் நடக்கும் 'என்றார்.