/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம்
/
குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம்
ADDED : பிப் 13, 2026 06:06 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில், 'அரோகரா' சரண கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் உப கோயிலான பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் பிப்.4ல் தேரோட்டத்தை முன்னிட்டு கொடி ஏற்றம் நடந்தது.
தொடர்ந்து உற்ஸவர் அன்னம், மயில், குதிரை, காளை, சேவல், கிடா, பூதம், சிங்கம், யானை உள்ளிட்ட வாகனங்களில் நாள்தோறும் வீதி உலா நடந்தது. மலைப் பகுதியில் இருவடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக தேர் நிலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அங்கப்பிரதட்சணம், காவடி எடுத்து வந்தனர். மலைப் பகுதி முருகன் கோயில்களில் கிரிவலத்தில் மிகப்பெரிய தேரோட்டமாக இந்நிகழ்வு அமைந்தது. இதை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் வருகை தந்தனர்.
அலங்காரத்தில் காட்சியளித்த குழந்தை வேலப்பரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து, பிரசாதம் பெற்றுச் சென்றனர். ஏற்பாடுகளை பழநி கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

