/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு உத்தரவிட்டும் பூட்டிக்கிடந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள்
/
அரசு உத்தரவிட்டும் பூட்டிக்கிடந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள்
அரசு உத்தரவிட்டும் பூட்டிக்கிடந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள்
அரசு உத்தரவிட்டும் பூட்டிக்கிடந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள்
ADDED : பிப் 03, 2025 05:52 AM
திண்டுக்கல்: அரசு உத்தரவிட்டும் அதிகாரிகள் பணிக்கு வராததால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் பூட்டிக்கிடந்தது.
புதிதாக வீட்டுமனை, வீடு வாங்க விரும்புபவர்கள் அதற்கான பத்திரப்பதிவை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ளவே பெரும்பாலும் விரும்புவார்கள். இதை கருத்தில் கொண்டு பொது விடுமுறை நாளான நேற்று முகூர்த்த நாள் என்பதால், விடுமுறை நாள் என்ற போதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் வழக்கம் போல் காலை 10:00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்படும் என அரசு அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. தமிழகம் முழுவதும் பொது விடுமுறை நாளில் பத்திரப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பதிவுத்துறை பணியாளர்கள், பத்திர எழுத்தர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம், பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார், வடமதுரை, நத்தம், நிலக்கோட்டை என மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அந்த அலுவலகங்கள் நேற்று பூட்டிய நிலையில் வெறிச்சோடியது. பத்திர எழுத்தர்களும் தங்களின் அலுவலகங்களை மூடி பணிப்புறக்கணிப்பு செய்தனர். திண்டுக்கல் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் காலையில் ஓரிரு பணியாளர்கள் மட்டும் வந்தனர். சிறிது நேரத்தில் அவர்களும் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனர்.
பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், பொதுவிடுமுறை நாளில் தான் பதிவுத்துறையை சேர்ந்த பணியாளர்கள், பத்திர எழுத்தர்கள் தங்கள் குடும்பத்துக்காக நேரத்தை செலவிடுவார்கள். அந்த நாளில் பணியாற்ற வேண்டும் என்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு அறிவித்தது என்றனர்.