/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யலுாரில் திறக்கப்பட்டது தேவாங்கு பாதுகாப்பு மையம
/
அய்யலுாரில் திறக்கப்பட்டது தேவாங்கு பாதுகாப்பு மையம
அய்யலுாரில் திறக்கப்பட்டது தேவாங்கு பாதுகாப்பு மையம
அய்யலுாரில் திறக்கப்பட்டது தேவாங்கு பாதுகாப்பு மையம
ADDED : மார் 09, 2026 04:37 AM

வடமதுரை: இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயத்தின் முகமாக திண்டுக்கல் மாவட்டம் அய்யலுாரில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட தேவாங்கு பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், கரூர் மாவட்டம் கடவூர் மலைத்தொடரில் அரிய வகை பாலுாட்டி விலங்கான தேவாங்குகள் பரவலாக காணப்படுகின்றன.
தேவாங்கு இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக இயற்கை பாதுகாப்பு சர்வதேச அமைப்பு தெரிவித்தது. எனவே அவற்றை பாதுகாக்க அய்யலுாரில் சரணாலயம் அமைக்க இயற்கை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தினர். தினமலர் நாளிதழும் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வலியுறுத்தியது.
இதன் பலனாக அய்யலுார், கடவூர் பகுதிகளை சேர்ந்த 11,806 எக்டேர் மலைப்பரப்பை ஒருங்கிணைத்து கடவூர் தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
இதன் ஒருபகுதியாக அய்யலுார் பூனை கரட்டில் தேவாங்கு பாதுகாப்பு மையம் ரூ.16 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பூங்கா, உணவகம், பாதுகாப்பு மைய கட்டடம், தொடர்பாடல் மையம், நுாலகம், பொழுதுபோக்கு மையம், பார்வையாளர் மையம், குழந்தைகள் விளையாட்டு பகுதி, சாகச மண்டலம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தொடர்பை மேம்படுத்தும் வகையில் www.slenderloriscentre.com என்ற இணையதளம், தேவாங்கு மொபைல் ஆப் பயன்பாடும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தேவாங்கு மையத்தின் நோக்கங்கள், வசதிகள், பாதுகாப்பு முக்கியத்துவம், பார்வையாளர் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயில் எதிரே ஒரு கி.மீ., துாரத்தில் இம்மையம் உள்ளது. திருப்பூர் அமராவதி அணையில் இருக்கும் முதலைப்பண்ணை, திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா போலவே அய்யலுாரில் அமைக்கப்பட்டுள்ள தேவாங்கு பாதுகாப்பு மையம் உருவெடுக்கும். இதன் மூலம் தேசிய அளவில் அய்யலுாருக்கு தனித்துவ அடையாளம் கிடைக்கும்.
மையத்தின் நோக்கம்
எளிதில் காண முடியாத தேவாங்கு மற்றும் அதன் வறண்ட காடு வாழ்விடத்தை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட முன்னணி கல்வி விழிப்புணர்வு மையமாக இது செயல்படும். மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை உருவாக்கவும், தேவாங்கின் சூழலியல் குறித்த அறிவியல் புரிதலை மேம்படுத்தவும், வன விலங்கு பாதுகாப்பு, வாழ்விட பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த மையம் உதவும். சுற்றுலாவை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரித்தல், வனம் சார்ந்த வளங்கள் மீதான சார்பை குறைத்தல் உள்ளிட்ட பணிகளும் தேவாங்கு பாதுகாப்பு மையத்தின் முக்கிய நோக்கங்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

