ADDED : ஆக 05, 2011 10:46 PM
பழநி:பழநி அருகே தோட்டத்து வீட்டைச் சூழ்ந்த யானைக்கூட்டம், பொருட்களை சேதப்படுத்தின. பழநி அருகே புதுஆயக்குடியைச் சேர்ந்தவர் ராமர் (35). புளியமரத்து 'ஷெட்' பகுதியில் மாந்தோப்பு பராமரிப்பில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள வீட்டில், குடும்பத்துடன் தங்கியிருந்தார். ஜூலை 27 நள்ளிரவில், ஒன்பது யானைகள் வீட்டை முற்றுகையிட்டன. வீட்டின் முன்பகுதி, பொருட்களை சேதப்படுத்தின. தாக்குதலை நிறுத்திய யானைகள், இரண்டு மணிநேரத்திற்குப் பின் வனப்பகுதிக்கு திரும்பின.
வனத்துறை அறிவுரைப்படி, ராமர் வசிப்பிடத்தை மாற்றினார். நேற்று முன்தினம் இரவு, பழைய வீட்டை 10க்கும் மேற்பட்ட யானைகள் முற்றுகையிட்டு சேதப்படுத்தின.
ரேஞ்சர் தர்மராஜ் கூறுகையில், ''கடந்த வாரம் யானைகளிடம் இருந்து தப்பிக்க, தீப்பந்துகளை வீசியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த யானைகள், மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளன. யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.