ADDED : ஜன 27, 2025 03:56 AM

வேலுார் இப்ராஹிம் குற்றச்சாட்டு
கொடைக்கானல்: ''தமிழகத்தில் மத மோதல்களுக்கு தி.மு.க., துணை போகிறது,'' என, கொடைக்கானலில் பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது: சுற்றுலா நகரான கொடைக்கானலில் தற்போது போதை காளான், கஞ்சா விற்பனை தடையின்றி நடக்கிறது. தமிழகத்தில் போலீஸ் துறை ஏவல் துறையாக செயல்படுகிறது.
2000 ஆண்டுகள் பெருமைவாய்ந்த திருப்பரங்குன்றத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் சிக்கந்தர் தர்க்காவிற்கு ஹிந்துக்கள் சகிப்புத்தன்மையுடன் இடம் கொடுத்தார்கள். ஆனால் இன்று எஸ்.டி.பி.ஐ., முஸ்லிம் லீக் உள்ளிட்ட பிற பயங்கரவாதத்தை துாண்டும் அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் மாட்டுக்கறி பிரியாணியை சாப்பிட்டு அதன் புனிதத்தை கெடுத்துள்ளனர். அதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதை எதிர்த்து இஸ்லாமியரான நான் நியாயமான கருத்தை வெளியிட முயற்சிக்கையில் போலீசார் என்னை கைது செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்தனர். இப்பிரச்னைக்கு காரணமான தி.மு.க., தமிழகத்தில் மத மோதல் ஏற்பட துணை போவதை உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவை துண்டாடும் சில அமைப்புகள் ஆன்மிக பூமியான தமிழகத்தை களங்கப்படுத்துகின்றன. திருப்பரங்குன்றத்தில் மாட்டு பிரியாணி சாப்பிட்டவர்களை வேடிக்கை பார்க்கும் போலீசார், தி.மு.க.வினர் ஹிந்துக்களை தொடர்ந்து கொச்சைப்படுத்துவதை வேடிக்கை பார்க்கின்றனர்.
2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ஓட்டுவங்கி அரசியலுக்காக தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் இதுபோன்று பிரித்தாலும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதை பா.ஜ., சிறுபான்மை பிரிவு கண்டிக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்க்காவிற்கு நல்லிண பயணமாக பா.ஜ., சார்பில் செல்வோம். அதற்கு எவ்வளவு பெரிய தடை வந்தாலும் அஞ்ச மாட்டோம் என்றார்.
