/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கலெக்டர் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய வந்த ஊழியர்கள்
/
கலெக்டர் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய வந்த ஊழியர்கள்
கலெக்டர் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய வந்த ஊழியர்கள்
கலெக்டர் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய வந்த ஊழியர்கள்
ADDED : ஜூன் 27, 2025 12:50 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்த நிலையில் வருவாய்துறை பேச்சுவார்த்தையின் காரணமாக காலஅவகாசம் வழங்கப்பட்டது.
வேடசந்துார் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் சாரங்கபாணி 70, சவுந்தரராஜன் 60.
இவர்களுக்கு சொந்தமான நிலம் 1988ல் திண்டுக்கல்- கரூர் ரெயில் பாதை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.1 கோடியை இழப்பீட்டு தொகையாக அரசு நிர்ணயம் செய்தது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த தொகை வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காலக்கெடு முடிந்தும் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. இதையடுத்து சாரங்கபாணி, சவுந்தரராஜன் குடும்பத்தினர் திண்டுக்கல் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரித்த நீதிமன்றம் அரசு நிர்ணயித்த இழப்பீட்டு தொகையை வட்டியுடன் ரெயில்வே துறையில் இருந்து வசூலித்து மனுதாரர்கள் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் அதன் பிறகும் மனுதாரர்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு 2011ல் விசாரணைக்கு வந்தது. 3 மாத காலத்துக்குள் மனுதாரர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டது. இதையடுத்து ரூ.42 லட்சம் இழப்பீட்டு தொகையாக சாரங்கபாணி, சவுந்திரராஜன் குடுபத்துக்கு வழங்கப்பட்டது. மீதித்தொகையான ரூ.58 லட்சம் வழங்கவில்லை.
இழப்பீட்டு தொகையை உடனே வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி திண்டுக்கல் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனுதாரர்கள் சார்பில் 2016ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பிறகும் இழப்பீட்டு தொகை கிடைக்காததால் மனுதாரர்கள் தரப்பில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரித்த நீதிபதி தீபா, திண்டுக்கல் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்ற ஊழியர்கள் நேற்று மதியம் 1 :00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை பொது பிரிவு அலுவலகத்தில் உள்ள 100 மர மேஜைகள், 150 மர நாற்காலிகள், 50 கம்ப்யூட்டர்கள், 15 தட்டச்சு எந்திரங்கள், 100 மின்விசிறிகள், 3 கார்களை ஜப்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரெயில்வே நிர்வாகத்திடம் இழப்பீடு தொகை பெற்று தருவதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்ட நிலையில் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.