ADDED : நவ 05, 2024 05:45 AM
திண்டுக்கல்: தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை சென்ற பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களில் பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிவோர், வசிப்போர் ஏராளமானோர் ஆம்னி பஸ்களில் சென்றனர். இந்த பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக திண்டுக்கல் போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி, வாகன ஆய்வாளர்கள் இளங்கோ, கமலாமெர்சி, சண்முகஆனந்த், கருப்புசாமி ஆகியோர் திருச்சி ரோடு, வத்தலக்குண்டு, வேடசந்துார், பழநி உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி ரோடு வழியாக சென்னை செல்லும் ஆம்னி பஸ்சில் ஏறி சோதனை செய்தனர்.
இதில் 3 பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரிந்தது. உடனே அதிகாரிகள் கூடுதலாக பெற்ற கட்டணத்தை பஸ் நிர்வாகத்திடமிருந்து வாங்கி கொடுத்தனர். இதற்காக பஸ் நிறுவனத்திற்கு அபராதமும் விதிக்கப்பட்டது.