/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநகராட்சி குப்பைக்கிடங்கில் தீ
/
மாநகராட்சி குப்பைக்கிடங்கில் தீ
ADDED : மார் 10, 2026 05:57 AM

திண்டுக்கல்: திண்டுக்கல், பழநி ரோடு முருக பவனத்தில் 16.5 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. தினசரி சேகரிக்கப்படும் 80 டன் குப்பைகள் இங்கு கொண்டு செல்லப்பட்டு மக்கும், மக்கா குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் கழிவுகள் உர செயலாக்க மையத்திற்கு அனுப்பப்பட்டு இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகிறது. இவை வீட்டுத்தோட்டம், விவசாயப் பணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மலைபோல் தேங்கிக்கிடக்கும் குப்பையில் திடீரென தீப்பிடித்தது. அதிக வெயில், காற்று காரணமாக தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் உண்டான கரும்புகை முத்துராஜ் நகர், கருணாநிதி நகர், முருக பவனம், மீனாட்சிநாயக்கன்ப்பட்டி சுற்றுப்பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் மக்கள் மூச்சுத்திணறலால் அவதியடைந்தனர்.
தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் தீயணைப்பு மீட்புத் துறையினர் உதவியுடன் குப்பைக்கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

