/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் யானையை கண்காணிக்கும் வனத்துறை
/
பழநி கோயில் யானையை கண்காணிக்கும் வனத்துறை
ADDED : நவ 23, 2024 05:48 AM

திண்டுக்கல்; திருச்செந்துார் யானை தாக்கி பாகன் உட்பட இருவர் பலியான சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் யானை கஸ்துாரியை வனத்துறை அதிகாரிகள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான தெய்வானை யானை உள்ளது.
சுவாமி வீதி உலாவின் போது முன்பாக சென்று வரவும் மற்ற நேரங்களில் கோயில் முன்பாக நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கும் பணியிலும் இந்த யானை ஈடுபட்டு வந்தது. சில தினங்களுக்கு முன் உதவி பாகனாக இருந்த திருச்செந்துார் வ.உ.சி., தெருவை சேர்ந்த உதயகுமாரும்,அவரது உறவினரான சிசுபாலன் என்பவரும் யானை அருகே இருந்தனர்.
அப்போது யானை சிசுபாலனை தாக்கியது. கட்டுப்படுத்த முயன்ற உதயகுமாரை தும்பிக்கையால் துாக்கி வீசியது. இருவரும் இறந்தனர்.
இதன் எதிரொலியாக உயர் அதிகாரிகள் உத்தரவில் திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் பராமரிக்கப்படும் யானை கஸ்துாரியை தினமும் காலை நேரில் பார்வையிட்டு அதன் கால்கள்,தும்பிக்கையின் அசைவுகள் வித்தியாசமாக உள்ளதா,நடவடிக்கையில் எதுவும் மாற்றம் இருக்கிறதா,உணவுகளை முறையாக சாப்பிடுகிறதா என அதன் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிக்க அலுவலர்களை திண்டுக்கல் வனத்துறை அதிகாரிகள் நியமித்துள்ளனர்.
அதன்படி யானை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த மாற்றமும் இல்லாமல் யானை இயல்பு நிலையில் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே மருத்துவ குழுவினரும் யானையை பரிசோதனை செய்கின்றனர்.