UPDATED : ஆக 20, 2026 09:55 PM
ADDED : ஆக 20, 2026 09:54 PM

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பேனா பரிசளித்து போக்குவரத்து போலீசார் பாராட்டினர்.
மாவட்டத்தில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் படி போலீசார் சோதனை நடத்தி விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர். ஊர்வலம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் டூவீலரில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியும்படி வலியுறுத்துகின்றனர்.
திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே போக்குவரத்து போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது அவ்வழியே ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி விபத்தில் உயிரிழக்கும் நபரின் குடும்ப நிலையை கூறி கட்டாயம் ஹெல்மெட் அணியும்படி அறிவுறுத்தினர். சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பேனா பரிசாக வழங்கி பாராட்டினர். எஸ்.ஐ., முத்துராமலிங்கம், போலீசார் பங்கேற்றனர்.
