ADDED : அக் 20, 2024 01:41 AM

கொடைக்கானல்:கொடைக்கானல் ஏரிக்கரையில் உள்ள புதர் செடிகளை அகற்றும் பணியில் நகராட்சி ஈடுபட்டுள்ள நிலையில் அது பளிச்சிடுவதால் சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் நகரின் மையத்தில் உள்ளது ஏரி. இங்குள்ள சுற்றுலா தலங்களில் இதயமாக உள்ள இந்த ஏரி 5 .கி.மீ., பரப்புடையது. இதனை சுற்றி நடை பயிற்சி, குதிரை, சைக்கிள் சவாரி, ஏரியில் படகு சவாரி என கொடைக்கானல் வருகை தருவோர் தங்களது மனதை ஒருமுகப்படுத்தி இளைப்பாரி செல்கின்றனர்.
இந்நிலையில் ஏரிக் கரையோரம் செடி, கொடிகள் சூழ்ந்தும், மண்மேடு, குப்பை குவியல், நீர் தாவரங்கள் என அலங்கோலமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் ஏரியை அழகுபடுத்தும் முயற்சிகளை அரசு மேற்கண்ட போதும் அவை ஏனோ பொலிவு பெறவில்லை. தற்போது நகராட்சி இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் ஏரிக்கரையோரங்களில் புதர்களை அகற்றி துாய்மைப்படுத்தி வருகிறது.
மேலும் கரையோரங்களில் உள்ள இடையூறு மரக்கிளைகளை களைந்து ஏரியை பளிச்சிட செய்யும் வகையில் பணிகளை செய்து வருகிறது. இதில் வில்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நகராட்சியின் முயற்சியால் ஏரி எப்போதும் இல்லாத அளவிற்கு அழகுற காட்சியளிக்கிறது. இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் கூறியதாவது:
ஏரி கரையோரங்களில் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற நகராட்சி முடிவு செய்து இதற்கான பிரத்யேக தொழிலாளர்களை களமிறக்கியுள்ளது. இப்பணிகள் தற்போது தான் துவங்கியுள்ள நிலையில் ஏரியில் உள்ள புதர்கள் முழுமையாக அகற்றப்படும். குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் என அனைத்தும் அகற்றப்பட்டு ஏரி கரையோரங்களில் பூச்செடிகள் நடவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏரியில் படகு சவாரி செய்வோர் குப்பை செலுத்துவதற்காக ஆங்காங்கே தொட்டி அமைக்கப்பட உள்ளது. ஏரியை துாய்மையாக பராமரிப்பது , இயற்கை சுற்றுச்சூழல் குறித்து ஏரி கரையோரம் வாசகங்களை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.