/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தத்தில் பிரேக் பிடிக்காததால் தோப்பு கடைக்குள் புகுந்த அரசு பஸ்கள்
/
நத்தத்தில் பிரேக் பிடிக்காததால் தோப்பு கடைக்குள் புகுந்த அரசு பஸ்கள்
நத்தத்தில் பிரேக் பிடிக்காததால் தோப்பு கடைக்குள் புகுந்த அரசு பஸ்கள்
நத்தத்தில் பிரேக் பிடிக்காததால் தோப்பு கடைக்குள் புகுந்த அரசு பஸ்கள்
ADDED : நவ 04, 2024 03:54 AM

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அடுத்தடுத்து பிரேக் பிடிக்காமல் 2 அரசு பஸ்கள் தோப்பு மற்றும் மெடிக்கல் ஷாப்பில் புகுந்தன. மேலும் இரு பஸ்கள் பழுதாகி நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். பஸ்களை முறையாக பராமரிக்க இனியாவது போக்குவரத்து அதிகாரிகள் முன்வர வேண்டும்.
நத்தம் பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு மதுரை சென்று விட்டு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் திரும்பி வந்தது. பரளிபுதுார் சுங்கச்சாவடி அருகே பிரேக் பழுதால் பஸ் நின்றது.
பஸ்சிலிருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பஸ்சை ஊழியர்கள் நத்தம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு எடுத்து சென்ற போது பிரேக் பிடிக்காமல் அருகில் இருந்த புளியந்தோப்புக்குள் புகுந்து மரத்தில் மோதி நின்றது.
இதைப்போல நேற்று அதிகாலை 5:40 மணிக்கு நத்தம் பஸ் ஸ்டாண்டிலிருந்து சின்ன காசம்பட்டிக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது.
பஸ் ஸ்டாண்ட் வெளியே சென்ற போது பிரேக் பிடிக்காததால் அங்கிருந்த மெடிக்கல் ஷாப்புக்குள் பஸ் புகுந்தது. இதில் கடையின் முன்பகுதியிலிருந்த இரும்பு போர்டுகள், பஸ்சின் முன்பக்கமும் முழுவதும் சேதமடைந்தது. இந்த இரு சம்பவங்களிலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை.
நேற்று மாலை நத்தம் பஸ் ஸ்டாண்டிலிருந்து திண்டுக்கல் நோக்கி புறப்பட்ட அரசு பஸ் சிறிது நேரத்திலேயே சேர்வீடு பிரிவு பகுதியில் பழுதாகி நடுவழியில் நின்றது. அதில் பயணித்த 50க்கு மேற்பட்ட பயணிகள் நடுரோட்டில் இறக்கி விடப்பட்டு மாற்று பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.
டிரைவர், கண்டக்டர் தகராறு
சேர்வீடு பிரிவு பகுதியில் பழுதான பஸ்சை போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ்சின் டிரைவர், கண்டக்டர் தகராறில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் பழுதடைந்துள்ளதாக பயணிகள் பலமுறை போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.