ADDED : ஜன 13, 2025 04:19 AM

பழநி நகராட்சியுடன் இணைந்து, தன்னார்வலர்கள் ரோட்டோரங்கள்,குளக்கரைகளில் மரக்கன்றுகளை நடவு செய்து பழநி சுற்று வட்டாரங்களை பசுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பழநி நகராட்சி,தன்னார்வலர்கள் இணைந்து குப்பை கிடங்கு பகுதிகள்,ரோட்டோரங்கள், குளக்கரைகளில் மரக்கன்றுகள், பனை விதைகள், விதைப்பந்துகளை துாவி சுற்றுச்சூழலை உருவாக்கி வருகின்றனர். விதைப்பந்துகளில் பூவரசு, நாவல், அரசமரம், வேம்பு உள்ளிட்ட மரங்களின் விதைகளை வைத்து தயாரிக்கின்றனர். மேலும் பல்வேறு மரக்கன்றுகளை வனத்துறை, தனியார் நர்சரியிலிருந்து பெற்று நடவு செய்கின்றனர். இதற்கு தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்குகிறது. மழைக்காலத்திற்கு முன்பு துாவப்படும் விதைப்பந்துகள் விரைவில் முளைத்து மரங்களாக வளர துவங்கியிருக்கிறது. தற்போது விதைப்பந்துகளை தயாரித்து சேகரிக்கும் பணிகள் நடக்கின்றன.
பிளாஸ்டிக் வேண்டாம்
மனோஜ் குமார்,நகராட்சி நகர் நல அலுவலர்,பழநி: பழநி நகராட்சியில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. நகராட்சிக்கு சொந்தமான குப்பை குடங்கில் காலியாக உள்ள இடத்தில் 500க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. 300க்கு மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அவை வளர்ந்து வர தகுந்த சூழலை உருவாக்குகிறோம். இது தவிர தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் அதிகளவில் வருவதால் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.
மரம் நடுவது இலக்கு
குப்புசாமி, ஒருங்கிணைப்பாளர், விழுதுகள் அமைப்பு, பழநி: பசுமையான பழநியை உருவாக்க 2025ல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். தற்போது தைப்பூசம் காரணமாக நகராட்சி ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை இருப்பதால் விதைகள் சேகரிக்கும் பணிகளை செய்கிறோம். அதன் பின்பு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் விதைப்பந்துகள் ஆகியவை நடப்பட்டு பராமரிக்கப்படும். 2025ல் அதிக அளவில் மரங்கள் நடுவதை இலக்காக கொண்டுள்ளோம்.