ADDED : செப் 23, 2024 05:16 AM

திண்டுக்கல், : கார்த்திகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
கார்த்திகையை முன்னிட்டு நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையொட்டி காலையில் பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோவில், ஒய்.எம்.ஆர்., பட்டி முருகன் கோயில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது.
முன்னதாக மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. சிவசுப்பிரமணியருக்கு, வெள்ளி கவசம், ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், விசேஷ அபிஷேக,பூஜைகள் நடந்தது.
தாண்டிக்குடி: பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை,விளக்கு பூஜை நடந்தது. ராஜா அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.
நத்தம்:-சாணார்பட்டி திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மலர்களால் அலங்காரம் செய்ய வெள்ளிக் கவச அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீபாராதனைகள் நடந்தது. காமாட்சி மவுனகுரு மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறக்காவலர் அழகுலிங்கம் செய்தார்.
நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோயிலில் உள்ள வெற்றிவேல் முருகன் சன்னிதியில் முருகனுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. வேம்பார்பட்டி பாலமுருகன் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர்.