ADDED : பிப் 08, 2024 06:31 AM

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கூட்டம்
வேடசந்துார் : வேடசந்துார் அமைதி அறக்கட்டளை,சமூக நலத்துறை சார்பில் பி.கே. லட்சுமி டெக்ஸ்டைல் மில்லில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த குழு கூட்டம் நடந்தது. அறக்கட்டளைத் தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை வரவேற்றார். அமைதி அறக்கட்டளையின் மேலாளரும் குழந்தைகள் ,பெண்கள் பாதுகாப்பு குழு உறுப்பினருமான சீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா பேசினர். மன அழுத்தங்களை கையாளும் முறையை எவ்வாறு கையாளுவது,தொழிலாளர் நல பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. பணியாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.
அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் மாநகர நல அலுவலர் பரிதாவாணி ஆய்வு செய்தார். அங்கு காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகள் சுகாதாரமாக வழங்கப்படுகிறதா என ஊழியர்களிடம் கேட்டறிந்தனர். காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிப்பவர்கள் தங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
விபத்தில் பலி
பழநி : பழநி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்த சிராஜ் 52. இவர் வேல் ரவுண்டான அருகே குளத்து ரோட்டில் செல்லும் போது லாரி மோதி சம்பவ இடத்தில் இறந்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
திண்டுக்கல்: சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு திண்டுக்கல் போக்குவரத்து துறை சார்பில் வாகனங்களில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) ஜெயகவுரி தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இளங்கோ,சண்முகஆனந்த்,ஜேஸ்மின் கமலா மெர்சி,போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சேரலாதன் முன்னிலை வகித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் ஆர்.எம்.காலனி,காட்டாஸ்பத்திரி,பழநி ரோடு,தாடிக்கொம்பு ரோடு வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முடிந்தது.
பழநி: பழநி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சீட் பெல்ட் விழிப்புணர்வு ஊர்வலம் பழநி சண்முக நதி அருகே துவங்கியது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன் துவங்கி வைத்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி பங்கேற்றனர்.

