தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை

 அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை

 அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை


ADDED : ஆக 07, 2026 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: 'ஆட்சி மாற்றத்திற்கு பின் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை' என பழநி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

பழநி நகராட்சி கூட்டம் அதன் தலைவர் உமா மகேஸ்வரி(தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கந்தசாமி(கம்யூ.,), கமிஷனர் ராஜலட்சுமி, பொறியாளர் ராஜவேலு, சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார், உதவி பொறியாளர்கள் பாலசுப்ரமணி, அந்தோணி முன்னிலை வகித்தனர்.

சாகுல் ஹமீது, தி.மு.க.,: குடிநீர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வரும். கோடைகால நீர்த்தேக்கத்தில் கருவேல மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. உஜ்வாலா திட்டப் பணிகள் நடக்கவில்லை.

தலைவர்: குடிநீர் மூன்று நாட்களுக்கு ஒருமுறை 3 மணி நேரம் வரும். மாற்று திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கோடைகால நீர்த்தேக்கத்தில் வெட்டப்பட்ட மரங்களை எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

துணைத்தலைவர்: ஜிகா குடிநீர் பணிகள் எவ்வளவு நிறைவு பெற்று உள்ளது, விளக்கப்பட வேண்டும். பெரியப்பா நகர் குப்பை கிடங்கில் தீயை அணைக்க குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

தலைவர்: குப்பை கிடங்கில் புது போர்வெல் அமைக்கப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

இந்திரா, தி.மு.க.,: தெருவிளக்குகள் முறையாக எரியவில்லை. மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஜன்னத்துல் பிரதோஷ், அ.தி.மு.க.,: எங்கள் வார்டில் டெங்கு பரவும் நிலை உள்ளது. கொசுத்தொல்லை அதிகம் உள்ளது.

வீரமணி, தி.மு.க.,: தெருவிளக்கு, குடிநீர் பிரச்னைக்கு அப்பாற்பட்டு தெருநாய் தொல்லை அதிகம் உள்ளது.

முருகானந்தம், அ.தி.மு.க.,: நகராட்சி பணிகள் சரிவர நடப்பதில்லை. சண்முகநதி எரிவாயு மயானம் திறப்பது எப்போது.

தலைவர்: அதிகாரிகள் ஒத்துழைப்பு ஆட்சி மாற்றத்திற்கு பின் இல்லை. எரிவாயு மயானம் விரைவில் திறக்கப்படும்.

பத்மினி முருகானந்தம், காங்.,: திருவள்ளுவர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கையகப்படுத்துவது எப்போது. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு திடல் இல்லாமல் உள்ளது.

சு பா, தி.மு.க.,: இட்டேரி ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது.

விமலபாண்டியன், தி.மு.க.,: திருஆவினன்குடி அருகே தேவஸ்தானம் ஆக்கிரமிப்புகளை அதிகரித்து வருகிறது. இதனால் ரோடு சுருங்கியுள்ளது.

செபாஸ்டின், தி.மு.க.,: கியூ.ஆர்.கோடு மூலம் வாடகை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை அள்ளும் தொழிலாளர்கள் அதிகாலை 4:00 மணிக்கு வந்து பணிபுரியும் நிலை உள்ளது. அவர்களுக்கு சம்பளம் அதிகம் வழங்கப்படுகிறதா.

சுகாதார அலுவலர்: பெரு நகராட்சிக்கு உரிய சுகாதார பணியாளர்கள் இல்லை. பற்றாக்குறை உள்ளது. அதிக சுகாதார பணியாளர்களை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.

கமிஷனர்: கியூ.ஆர்.கோடு அமைக்க வங்கிகளிடம் பேசி வருகிறோம். விரைவில் தீர்வு காணப்படும்.

சுரேஷ், தி.மு.க.,: நாளிதழ்களில் நகராட்சி நிலம் பத்திரப்பதிவு செய்ததாக தகவல்கள் வந்தது. அதுகுறித்த நிலை என்ன. உழவர் சந்தை பாக்கி எவ்வளவு.

கமிஷனர்: 1974ல் பரிவர்த்தனை மூலம் 1.66 ஏக்கர் நிலத்திற்கு பதில் 4.15 ஏக்கர் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இதன் பட்டா மாற்றம் குறித்து வருவாய்த்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதுவரை மாற்றப்படவில்லை. பத்திரப்பதிவில் நகராட்சி நிலம் பதிவு செய்யப்படவில்லை. நகராட்சி சொத்துக்கள் 87 உள்ளன. உழவர் சந்தை வருவாய் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது கண்டித்து மகேஸ்வரி (தி.மு.க.,) தர்ணாவில் ஈடுபட முயன்றார். அவரை தலைவர் சமரசம் செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us